ஈரானின் அதிரடி அறிவிப்பு! அடுத்த நாளே நிகழ்ந்துள்ள பாரிய மாற்றம்
ஈரானின் ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக, ஈரான் நேற்று அறிவித்ததை தொடர்ந்து, இன்றைய தினம் உலகளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஈரானின் இந்த திடீர் முடிவினால் எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் உயரக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மசகு எண்ணெய்யின் விலை
இந்நிலையில், மசகு எண்ணெய்யின் விலை இன்றையதினம் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 3 சதவீத விலை அதிகரிப்புடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 79 டொலராக பதிவாகியுள்ளது.
ஈரான்-இஸ்ரேலுக்கு இடையிலான போரில் அமெரிக்கா களமிறங்கி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, மசகு எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழியாக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை
உலகின், சுமார் 20 சதவீதம் எரிபொருள் போக்குவரத்து நடைபெறும் பாரசீக வளைகுடா, ஹார்முஸ் நீரிணை வழியாக சர்வதேச பெருங்கடலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
உலகின் எண்ணெய் போக்குவரத்தில் 1/6 பங்கு நேரடியாக ஹார்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்படுவதுடன் தினமும் 17.2 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் அதன் வழியாக பல நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதில் சவுதி அரேபியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் உட்பட பல நாடுகளின் போக்குவரத்து நடவடிக்கைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
