நீர் வேளாண்மைசார் உற்பத்திகளை விஸ்தரிக்க ஊக்குவிப்பு தொகை
பிரதேச மக்களுக்கும் நாட்டிற்கும் நீர் வேளாண்மைசார் உற்பத்திகளின் ஊடாக பலமான வாழ்வாதார கட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியின் ஓர் அங்கமாக மன்னாருக்கான இன்றைய விஜயம் அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்திற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்தொழில் அமைச்சர், முதலாவது நாள் விஜயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஊக்குவிப்பு தொகை
அதனடிப்படையில், மன்னார், முசலிப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு கடல்பாசி மற்றும் கொடுவா மீன் உற்பத்தியை மேற்கொள்வதற்கான இரண்டாம் கட்ட ஊக்குவிப்பு தொகை வழங்கும் நிகழ்வு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முசலிப் பிரதேச செயலகத்தில் இன்று(18.09.2022) இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே முசலிப் பிரதேசத்தினை சேர்ந்த 27 பயனாளர்களுக்கு கடல்பாசி செய்கைக்காகவும், 6 பேருக்கு கொடுவா மீன் வளர்ப்பதற்குமான முதற் கட்ட ஊக்குவிப்பு தொகை கடந்த வருட இறுதியில் வழங்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக வாழ்வாதாரம்
நீர் வேளாண்மை சார்ந்த பாசி, கொடுவா மீன் வளர்ப்பு, கடலட்டை மற்றும் பண்ணை முறையிலான கடலுணவு வளர்ப்பு போன்றவற்றை விருத்தி செய்வதன் மூலம், கடற்தொழிலை ஜீவனோபாயமாக கொண்ட மக்களுக்கு மேலதிக வாழ்வாதாரத்தினை உருவாக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டத்திற்கு அமைய, நாடளாவிய ரீதியில் இந்த ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பாசி வளர்ப்பை மேற்கொள்கின்றவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவும், கொடுவா மீன் வளர்ப்பிற்காக தலா இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.