மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
இலங்கைக்கு கடத்துவதற்காக பொதி செய்யப்பட்ட சுமார் 158 கிலோ கஞ்சாவை மத்திய புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளனர்.
குறித்த கஞ்சாவின் சர்வதேச மதிப்பு சுமார் 2 கோடி எனவும் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது நேற்றையதினம் (05.04.2023) இடம்பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் பதிவு எண் கொண்ட ஆடி கார் ஒன்று மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வு பிரிவினரிற்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கார் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தேவஸ்தான கார் நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த மத்திய புலனாய்வு பிரிவு, கியூ பிரிவு பொலிஸார் மற்றும் எஸ்.பி. தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ள ஆடி காரினை எடுக்க யாரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இதற்கமைய வெகு நேரமாகியும் காரைத் தேடி யாரும் வராததால் விரக்தி அடைந்த பொலிஸார் மீட்பு வாகனத்தை கொண்டு ஆடி காரை மண்டப பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று காரை உடைத்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது இலங்கைக்கு கடத்துவதற்காக பொதி செய்யப்பட்ட சுமார் 158 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.
குறித்த காரில் மீட்க்கப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு சுமார் 2 கோடி இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் கார் தரிப்பிடத்தில் உள்ள சிசிரிவி கமராக்களை ஆய்வு செய்து குற்றவாளியை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.