சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்க சென்றவர்கள் மீது தாக்குதல்: சம்மந்தப்பட்ட பகுதிக்கு அமைச்சர் விஜயம்(Video)
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள ஆத்திமோட்டை கிராமத்தில் நேற்று முன்தினம் மணல் அகழ்வில் ஈடுபட்ட மன்னார் நானாட்டன் பிரதேச சபை உறுப்பினரின் மணல் தூக்கும் வாகனத்தை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காகக் காத்திருந்த பொது மக்கள் மற்றும் கிராம சேவகர்கள் மீதும் குண்டர்களை ஏவி தாக்குதலை நடத்தியுள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு நேற்றைய தினம் (04.03.2023) அமைச்சர் காதர் மஸ்தான் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் மணல் அகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு பொது மக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, நேரடியா விஜயம் மேற்கொண்டு மணல் அகழ்வை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் உட்பட்ட குழுவினர் தடுத்து நிறுத்தி பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டிருந்த நிலையில், இலுப்பை கடவை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சம்மந்தப்பட்ட மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர் மீதோ, குழு மீதோ எந்த நடவடிக்கையும் மேற்கொண்டிருக்கவில்லை.
குழுக்கள் இணைந்து தாக்குதல்
மேலும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கையகப்படுத்தாத நிலையில் அதைப் பாதுகாத்த மக்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் மீதும் நேற்றைய தினம் பிரதேச சபை உறுப்பினர் ரொஜன் ஸ்ராலின் தலைமையிலான குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
15க்கு மேற்பட்ட குண்டர் குழுக்கள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டதில் அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உட்படப் பெண் கிராம சேவகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இலுப்பை கடவை பொலிஸார் பல மணி நேரம் ஆகியும் எந்த வித நடவடிக்கை மேற்கொள்ளாததைத் தொடர்ந்து, ஆத்தி மோட்டை கிராம மக்கள் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் அமைச்சருமான காதர் மஸ்தானுக்கு விடயத்தைத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் தக்குதலுக்குள்ளான நபர் கிரம சேவகர்களைச் சந்தித்ததுடன் ஆத்தி மோட்டை பகுதி மக்களிடமும் கலந்துரையாடியுள்ளார்.
சட்டவிரோத மணல் அகழ்வு
அத்துடன், சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்ற பகுதிக்கும் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.
அதேநேரம் குறித்த பிரச்சினை மற்றும் மணல் அகழ்விற்கு வழங்கப்பட்ட முறையற்ற அனுமதி மற்றும் பொலிஸார் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமை தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
குறித்த மணல் அகழ்வுடன் சம்மந்தப்பட்ட ரொஜன் ஸ்ராலின் எனத் தெரிவிக்கப்படும் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் இதற்கு முன்னதாக பிரதேச சபை அமர்வில் வன்முறையில் ஈடுபட்டவர் என்பதுடன் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பல வழக்குகள் இவர் மீது உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இம்முறை குத்துவிளக்கு சின்னதில் மன்னாரில் களமிறங்கியுள்ள ஜனநாயக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முருங்கன் வட்டார வேட்பாளராக மீண்டும் தேர்தலில்
போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.