இலங்கையில் ஆலயங்களுக்கு முன்னாள் திரள தயாராகும் இந்துக்கள்
பங்களாதேஸில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து ஆலயங்கள் தாக்கப்பட்டு, இந்து துறவி உட்பட பலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்து அமைப்புக்கள், இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் சி.வரதநிரோசன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை நாட்டிலுள்ள இந்து ஆலயங்களால், குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டி பிரார்த்தனையும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு - கல்லடியிலுள்ள திருச்செந்தூர் முருகன் ஆலய மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,
உலகிலே எங்காவது ஒரு மூலையில் இந்துக்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அது நமக்கு ஏற்பட்ட துன்பமாக கருத வேண்டும். அப்போது மட்டும் தான் நீ உண்மையான இந்துவாகும் என சுவாமி விவேகானந்தர் கூறினார்.
பங்களாதேஸில் 2013ம் ஆண்டில் இருந்து இதுவரை 3680 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் நவராத்திரி தினத்திலே இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமிய மதவெறியாளர்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் சுவாமி நிதிதாஸ் பிரபு உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன், 550 வீடுகள், 442 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், 861 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், பல பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளதுடன், 1608 இந்து மற்றும் பௌத்த விகாரைகள், இராமகிருஷ்ண மிஷன் உட்பட வணக்கஸ்தலங்கள் உட்பட 51 அம்மன் சக்தி பீடங்களில் இரண்டான தாட்சாயினுடைய 50வது சக்தி பீடமான அவரது வலதுகை வீழ்ந்த இடம், நாக்கு வீழ்ந்த இடத்திலுள்ள சக்தி பீடம் என்பன தாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு இந்த நவராத்திரி தினத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இந்த கொலைவெறி தாக்குதலை இலங்கை வாழ் இந்துக்கள் இந்து அமைப்புக்கள் இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்கள் கூட்டமைப்பாக இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதேவேளை இவ்வாறான இந்துக்களுக்கு எதிராக இம்பெற்ற இந்த தாக்குதலை கண்டித்தும் அந்த தாக்குதலில் உயிர் நீத்த உமது உறவுகளுக்கு ஆத்மசாந்தி வேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் எதிர்வரும் 29ம் திகதி மாலை 6 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஆலயங்களுக்கு முன்னால் ஈடுபட இந்து ஆலயங்கள் இந்து அமைப்புக்கள் நிறுவனங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
எனவே அன்றைய தினம் இந்த இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருமித்து குரல் கொடுக்க நாட்டிலுள்ள இந்து ஆலயங்களுக்கு முன்னால் அகழ்விளக்கு ஏற்றி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.