நுவரெலியா மாவட்டத்தில் பதிவான வாக்கு சதவீதம்
நுவரெலியா மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
செய்தி-செ.திவாகரன்
நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று(06.05.2025) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
அதன்படி, இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை 6,10,117 ஆகும். இதில் 18,342 பேர் அஞ்சல் வாக்காளர்களாகும்.
ஜீவன் தொண்டமான்
நடைபெறுகின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தனது வாக்கு பதிவினை மேற்கொண்டுள்ளார்.
கொத்மலை வேவண்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை அவர் பதிவு செய்துள்ளார்.
செய்தி - திருமால்
கண்காணிப்பு நடவடிக்கை
நுவரெலியா மாவட்டத்தில் 540 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.
மேலும், அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக 6,352 அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் போக்குவரத்துக்காக அரச மற்றும் தனியார் வாகனங்கள் அடங்கலாக 672 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றது.
அதேபோல், மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


