முல்லைத்தீவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கை
முல்லைத்தீவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பிற்பகல் 2 மணிவரை 40,699 (48.45%) சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பாக இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06.05) காலை ஆரம்பமாகிய நிலையில் முல்லைத்தீவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
137 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 87ஆயிரத்து 800 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் தபால் மூலம் வாக்களிக்க தகுதியுடையவர்கள் 3807 பேர்.
பொலிஸாரின் பாதுகாப்புக்கு அமைதியில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. 4 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற 137 வாக்களிப்பு நிலையங்களில் இருக்கின்ற வாக்குப்பெட்டிகள் 41 வட்டாரங்களில் அமைக்கப்பட்டிருக்கின்ற வாக்கு எண்ணும் நிலையங்களிற்கு எடுத்து வரப்பட்டு வாக்கு கணக்கெடுப்பு இடம்பெறும்.
அதன் பின்னர் இறுதி முடிவுகள் மாவட்ட செயலகத்தில் அறிவிக்கப்படும் என மேலும் கூறியுள்ளார்.
மூன்றாம் இணைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாலை 02 மணிவரை 48.45 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
குறித்த தேர்தலில் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் 1291 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 274 பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (6) காலை 10.00 மணிவரை 24.97 வீதவாக்கு பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பாக இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06.05) காலை ஆரம்பமாகிய நிலையில் முல்லைத்தீவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களிக்கின்றனர்.
ஒரு இலட்சத்து 87ஆயிரத்து 800 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 137 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொலிசாரின் பாதுகாப்புக்கு அமைதியில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது என மேலும் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளன.
புதிய உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மக்கள் உற்சாகமாக புதிய உறுப்பினர்களை தெரிவு செய்ய அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர்.
அமைதியான வாக்களிப்பு..
முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களில், 87,800 பேர் வாக்களிக்கு தகுதிப்பெற்றுள்ளனர்.
அத்தோடு இந்த தேர்தல் பணிக்காக தேர்தலில் 1291 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 274 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், நடமாடும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது.
அதில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 10 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 7 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும், துணுக்காய் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும், மாந்தைகிழக்கு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 ஆறு கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களுமாக மொத்தம் 38 அணிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.