வெலிகம துப்பாக்கிச்சூட்டில் மறைக்கப்பட்ட உண்மைகள்! விசாரணையில் சிக்கிய அதிகாரிகள்
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு நேற்று (12) நான்காவது நாளாகக் கூடியதுடன், சாட்சிய விசாரணை இரவு ஒன்பது மணி வரை நடைபெற்றது.
வெலிகம W 15 ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நாளில் கண்காணிப்பு குழுவின் தலைவராக இருந்த வெலிகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் அஜித் சிசார குமார, குழு முன் சாட்சியமளித்தார்.
"அன்று வெலிகம கண்காணிப்பு குழுவில் என்னுடன் இன்னொரு பொலிஸ் அதிகாரியும் இரண்டு இராணுவ அதிகாரிகளும் பணியில் இருந்தனர்.
நாங்கள் W 15 ஹோட்டலைக் கடந்து செல்லும்போது, ஒரு வெள்ளை வான் நின்றிருப்பதைக் கண்டோம். பட்டாசு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது.
வெள்ளை வான்
நாங்கள் அருகில் சென்றபோது, ஒற்றை கருப்பு உடை அணிந்த ஒருவர் வானின் பக்கவாட்டு கதவைத் திறந்து ஹோட்டலை நோக்கிச் சுடுவதைக் கண்டோம்.
அதிகாலை சுமார் 2:20 மணி. நான் ஜீப்பில் இருந்து இறங்கி வானை நோக்கி நடந்து வந்தபோது, வான் இயக்கப்பட்டு என்னை நோக்கி வேகமாக வருவதைக் கண்டேன். அந்த நேரத்தில், எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்று நான் பயந்தேன்.
இதன்போது ஜீப்பில் இருந்த எங்கள் குழுவின் அதிகாரிகளை சுட உத்தரவிட்டேன். அப்போது, தமது அதிகாரி வானை நோக்கிச் சுட்டார். எனினும் தப்பித்து வான் காலியை நோக்கி வேகமாகச் சென்றது." என கூறியுள்ளார்
அதைத் தொடர்ந்து, அன்றைய தினம் கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் பயணித்த வானின் ஓட்டுநரான பொலிஸ் அதிகாரி துலிப் கெஹான் வீரசிங்கவிடம் சாட்சியங்கள் கோரப்பட்டன,
"கொழும்பு குற்றப்பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி, அன்ஸ்லம் டி சில்வா, மாத்தறை பகுதியில் ஒரு உத்தியோகபூர்வ பணிக்காக ஓட்டுநராக வரச் சொன்னார். அதற்காக எனக்கு ஒரு வெள்ளை வான் வழங்கப்பட்டது.
எண் தகடுகள் மாற்றப்பட்டன
அங்கு செல்வதற்கு முன், வானை வெள்ளை ஸ்டிக்கர்களைக் கொண்டு மறைக்க உத்தரவிடப்பட்டது. அந்த குழுவைச் சேர்ந்த நிஷாந்தா என்ற முன்னாள் அதிகாரிதான் அதற்கான உத்தரவை எனக்கு வழங்கினார்.
அந்த அதிகாரி எனக்கு பணம் கொடுத்து, டாலி சாலையில் உள்ள ஒரு கடையிலிருந்து ஸ்டிக்கர்களைக் கொண்டு வந்து ஒட்டச் சொன்னார்.
அதன்படி, நான் ஸ்டிக்கர்களை ஒட்டினேன்” என்றார்.
அப்போது, தலைமை நீதிபதி பிரீத்தி பத்மலால் சூரசேன, வான் புறப்பட்டபோது அதன் எண் தகடுகள் தொடர்பாக ஏதேனும் சம்பவம் நடந்ததா என்று கேட்டார்.
இதற்கு பதில் வழங்கிய அவர்,
"கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியின் வீட்டில் வானின் எண் தகடுகள் மாற்றப்பட்டன. பொலிஸ் ஆய்வாளர் நிஷாந்த, வாகனத்தின் பின்புறத்திலிருந்து இரண்டு எண் தகடுகளை எடுத்து அவற்றை மாற்றினார்.
பின்னர் அவர் அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்குச் சென்றார். அங்கு, மதுரங்க என்ற அதிகாரி வானின் பக்கவாட்டு கதவைத் திறந்து W15 ஹோட்டலை நோக்கிச் சுடுவதைக் கண்டேன்.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதைக் கண்டேன். பின்னால் இருந்து அதிகாரிகள் தகவல் அளித்ததும், நான் வானை முன்னோக்கி எடுத்துச் சென்றேன்.
அந்த நேரத்தில், உபுல் என்ற அதிகாரியும் மதுரங்க என்ற அதிகாரியும் சுடப்பட்டதாக பின்னால் இருந்த அதிகாரிகள் கூறுவதைக் கேட்டேன்.
போலி வாக்குமூலம்
கூகுள் வரைபடத்தை பார்த்து வைத்து கராப்பிட்டி வைத்தியசாலைக்கு செல்லுமாறு அதிகாரிகள் என்னிடம் கூறினர்.
நாங்கள் அங்கு சென்று கொண்டிருந்தபோது, இமதுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் இருந்த அதிகாரிகள், நாங்கள் பயணித்த வாகனம் ஒரு காரில் மோதியதைக் கண்டனர்.
பொலிஸ் அதிகாரிகள் பொறுப்பதிகாரியைக் கண்டதும், அவர்கள் தங்கள் அடையாள அட்டைகளைக் காட்டி, நாங்கள் கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று சொன்னார்கள், ஆனால் அவர்கள் எங்களை செல்ல அனுமதிக்கவில்லை.
அவர்கள் 119 ஐ அழைத்த பிறகு, வெலிகம பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் பல அதிகாரிகள் அங்கு வந்து எங்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று எங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
அங்கு, நிஷாந்த என்ற பொலிஸ ஆய்வாளர் உண்மையான சம்பவத்தைச் சொல்வதற்குப் பதிலாக வேறு வாக்குமூலம் அளிக்கச் சொன்னார்.
அதன்படி, W15 ஹோட்டல் அருகே நிறுத்தப்பட்டிருந்த எங்கள் வான் மீது யாரோ ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெலிகம பொலிஸாரிடம் தெரிவித்தோம்.
ஐயா, அதிகாரிகள் சொன்னதை நான் செய்தேன். வேறு என்ன செய்ய முடியும்? இதுபோன்ற ஒரு சம்பவத்தை நான் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் ஒருபோதும் அதில் ஈடுபட்டிருக்க மாட்டேன்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

விபத்து நடைபெற்ற விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பு பயணித்த பயணி முன்கூட்டியே எச்சரிக்கை News Lankasri
