கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக பதற்றம்: வீதிக்கிறங்கிய ஊழியர்கள்
இலங்கை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகளுக்கு எதிராகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன பதவி விலக கோரியும் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக சுகாதார ஊழியர்களால் இன்று குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு, மத்திய வங்கி உள்ளிட்ட பல நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அண்மை நாட்களில் அரசாங்கம் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தது.
பிரச்சினைகளுக்கு தீர்வு
எனினும், சுகாதார துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் இதுவரை அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அரசாங்கம் நித்திரையில், ஊழியர்கள் நடுத்தெருவில், நோயாளர்கள் மரணபடுக்கையில் போன்ற பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அத்தோடு, சுகாதார ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க அரசாங்கத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு வாரகால அவகாசம் வழங்கியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
