முழுமையாக தடுப்பூசி போட்டவர்களில் 2 சதவீதத்திற்கும் குறைவானோர் கோவிட்டால் உயிரிழப்பு - சுகாதார அமைச்சர் தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கோவிட் தடுப்பு பணிக்குழு இன்று சந்திக்கும் போது நாடு தழுவிய முடக்கல் மேலும் நீடிக்கப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மேலும், அனைத்து பொது மக்களும் விரைவில் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்வதே நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழியாகும்.
எனவே முடக்கலை மேலும் நீடிப்பது எந்த பயனையும் தராது என்று விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தனிப்பட்ட முறையில் தாம் முடக்கலுக்கு ஆதரவில்லை என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அது பொருளாதாரத்தையும் நாளாந்த தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கிறது.
எனினும் அனைத்து நிபுணர்களின் கருத்துக்களையும் பரிசீலித்த பின்னர் இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார்.
புள்ளிவிவரங்களின்படி, முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களில் 2 சதவீதத்திற்கும் குறைவானவர்களும், முதல் அளவைப் பெற்றவர்களில் 12.5 சதவீதமானவர்களும் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை 86 சதவீத இறப்புகள் தடுப்பூசி போடப்படாதவர்கள் மத்தியிலேயே இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாடு தழுவிய முடக்கலை நீடிப்பதை விட பகுதி வாரியாக முடக்கல்களை அமுல்படுத்தப்படலாம் என்றவொரு முன்மொழிவு இன்றைய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam