உணவுப்பொருட்களில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள்! விரிவான விசாரணைக்கு கோரிக்கை
இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களான தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட உணவுப்பொருட்களில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அடங்கியிருந்தமை குறித்து உடனடி மற்றும் விரிவான ஆய்வை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு (கோபா) சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் கேட்டுள்ளது.
அத்தகைய அதிகாரம் சுகாதார அமைச்சகத்திடம் உள்ளதாக குழு சுட்டிக்காட்டியுள்ளது.
உணவு பரிசோதனைக்கான ஆய்வக வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், உணவு பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் விரைவாக திருத்தப்பட வேண்டும் என்றும் பொது கணக்குகளுக்கான குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதான அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் உணவுப் பாதுகாப்புக்கான திட்டத்தை செயற்படுத்தாமை காரணமாக தற்போது பல சிக்கல்கள் எழுகின்றன என்பது தொடர்பில் கோபா கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அழகுசாதனப் பொருட்களில் அதிக தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய கூட்டத்தின்போது வலியுறுத்தினார்.