அரசாங்கத்திடம் மன்னார் ஆயர் விடுத்துள்ள கோரிக்கை
இந்த கால கட்டத்திலே நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் எதிர்பார்த்திருப்பது எங்களுக்கு இன்னும் அதிகமாகத் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் மக்களும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்வர வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் இந்த கோவிட் பெரும் தொற்று காலத்திலே வாழ்ந்து வருகின்றோம். இக் காலகட்டம் எமக்குப் பல சவால்களைத் தந்துள்ளது. அந்த சவால்களினால் நாங்கள் முடக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஏனெனில் இந்த தொற்று விரைவாகப் பரவும் ஒரு நிலையை நாங்கள் இலங்கை நாட்டிலும் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
எனவே தான் நாங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் தான் பயணங்களை மேற்கொள்ளக் கூடியதாக இன்று இருக்கின்றது. ஆகையினால் பாடசாலைகள் நடைபெறவில்லை.
வேலைக்குக் கூட எத்தனையோ பேருக்குப் போக முடியாமல் இருக்கின்றது. அதிலும் நாள் தொழில் செய்பவர்களுக்கு வருமானமே இல்லாத நிலை இருக்கின்றது. இப்படியான ஒரு கால கட்டத்தில் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இந்த நிலையை உலகளாவிய ரீதியில் இருக்கும் ஒரு பெரிய சவாலாக ஏற்று வாழ அழைக்கப்படுகின்றோம்.
எனவே தான் நாங்கள் நமது நாட்டுத் தலைவர்களும் சுகாதார அதிகாரிகளும் எங்களுக்குக் கொடுக்கும் அந்த சட்டங்களையும் அறிவுறுத்தல்களையும் நாங்கள் ஏற்று அதன்படி அந்த கட்டுப்பாட்டுடன் வாழ அவசியப்படுகிறது.
முகக் கவசம் அணிவதாக இருக்கலாம், சமூக இடைவெளியாக இருக்கலாம், கைகளைக் கழுவுவதாக இருக்கலாம், கூட்டமாக இருக்கக் கூடாத நிலையாக இருக்கலாம். இப்பிடியாக எமக்கு கொடுக்கப்பட்ட இந்த வரையறைகளைக் கட்டுப்பாடுகளை எற்று வாழ்வோம்.
இந்த காலகட்டத்திலே நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் எதிர் பார்த்திருப்பது எங்களுக்கு இன்னும் அதிகம் அதிகமாகத் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று. அதற்கமைய அரசாங்கம் பல முயற்சிகள் எடுத்துப் பல இடங்களில் விசேடமாகத் தொற்று கூடுதலாகக் காணப்படும் இடங்களில் அவர்கள் பொதுமக்களுக்குத் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொடுத்துக்கொண்டு வருகின்றார்கள்.
அந்த விதத்தில் இந்த சந்திப்பின் ஊடாக கூற வேண்டும். அதாவது மன்னார் மாவட்டத்தில் அதிகளவு இந்த தொற்று நோயாளர்கள் இனம் காணப்படாவிடத்திலும் நாங்களும் இந்த தடுப்பூசிகளை நிறைவாகப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
ஏற்கனவே எத்தனையோ வைத்தியர்களுக்கு வைத்திய சேவையில் ஈடுபட்டிருப்போருக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் சிலருக்கு முதல் பகுதி கொடுத்தாலும் இரண்டாவது தடுப்பூசி இன்னும் கிடைக்காது இருக்கிறார்கள்.
பொது மக்களிடையே இன்னும் தடுப்பூசியைப் பெறாமல் எத்தனையோ பேர் ஆவலோடு காத்திருக்கிறார்கள். குறிப்பாக அரசாங்கம் இதை உங்களுக்கு வழங்கும் போது இதைப் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போது அது அவசியமில்லை என்று விட்டு விடாதீர்கள்.
கட்டாயமாக இந்த நோயிலிருந்து விடுதலை பெறுவதற்கு நாங்கள் அனைவரும் இந்தத் தடுப்பூசி கிடைக்கப்பெற்று அதனூடாக பாதுகாப்பு பெற வேண்டும். அது நூற்றுக்கு நூறு பாதுகாப்பாக இல்லாமல் இருக்கலாம்.
ஆயினும் அது எம்மை
தற்போது பாதுகாக்கும் சிறந்த காரணியாக இருப்பதனால் நாங்களும் இந்த
தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு வாழ்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.