தனவந்தரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி! பலரின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம்(Photos)
வீட்டுவேலைக்கு சென்ற இடத்தில் நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்த மலையக சிறுமியின் சடலம், மஸ்கெலியா, மொக்கா தோட்டத்திலுள்ள பொது மயானத்தில் இன்று (22) அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மஸ்கெலியா, மொக்கா கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள 17 வயதான ரமணி என்ற சிறுமி ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கம்பஹா பகுதியில் ஆளும் தரப்பின் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரின் உறவினர் வீடொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
இறப்பு சம்பவம்
இதன்போது குறித்த வீட்டில் சிறுமி சுத்தப்படுத்தல் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளதுடன், நீச்சல் தடாகத்தில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீச்சல் தடாகத்தினை சுத்தப்படுத்த இறங்கிய போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சீ.சீ.டி.வி காணொளியில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
இதற்கமைய, சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்றைய தினம் கம்பஹா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிறுமி நீச்சல் தடாகத்தில் உள்ள நீரில் மூழ்கியமையினாலேயே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கம்பஹா மற்றும் மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




