ஜனாதிபதியை சந்தித்தார் கௌதம் அதானி!
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றிருந்ததாக The Press Trust of India செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதானி நிறுவனம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை (WTC) அபிவிருத்தி செய்து இயக்குவதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் (SLPA) உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.
இந்த சந்திப்பு குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. தனிப்பட்ட பயணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ள அதானி, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை சந்தித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
10 பேர் கொண்ட குழுவுடன் அதானி ஞாயிற்றுக்கிழமை இலங்கை சென்றடைந்தார்.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையமானது 35 ஆண்டுகளுக்கு ஒரு பொது-தனியார் கூட்டாண்மையாக உருவாக்க, இயக்க மற்றும் பரிமாற்ற அடிப்படையில் உருவாக்கப்படும் என அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் லிமிடெட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது.
இந்த திட்டம் மூலம் மேற்கு முனையத்தின் கொள்கலன் கையாளும் திறனை அதிகரிக்கவும், பரபரப்பான உலகளாவிய டிரான்ஷிப்மென்ட் பாதையில் உலகின் சிறந்த மூலோபாய முனைகளில் ஒன்றாக இலங்கையின் இருப்பிட நன்மையை மேலும் ஒருங்கிணைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.