கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியல்
தடுப்புக்காவலில் உள்ள சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது ஏற்படக்கூடிய பாதுகாப்பின்மையைக் கருத்தில் கொண்டு ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான விரிவான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையும் தனி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர் செவ்வந்தி உள்நாட்டில் உள்ளாரா அல்லது வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டாரா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த 19 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |