வடக்கு - கிழக்கில் தேசிய காற்பந்தாட்டத்தின் எதிர்காலம்: உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் கருத்து
வடக்கிலும் கிழக்கிலும் தான் எதிர்கால காற்பந்தாட்ட வீரர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்று இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு சென் ஜூட்ஸ் விளையாட்டுக்கழகம் நாடாத்திய உதைபந்தாட்ட சுற்று போட்டியில் நேற்றையதினம் (03.03.2024) பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இந்த மண்ணுக்கு நான் வந்த காரணம் இந்த காற்பந்தாட்டம் தான். இதுபோன்ற சுற்றுப்போட்டிகளை நடத்துவது இந்த காலகட்டத்தில் மிகவும் கடினமான விடயம்.
எதிர்கால வீரர்கள்
ஆனால், இலங்கையின் காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் என்ற வகையில் எங்கு காற்பந்தாட்டம் நடக்கின்றதோ அங்கே சென்று ஆர்வம் ஊட்டுவதுதான் எங்கள் குறிக்கோள்.
விளையாட்டு என்பது எல்லோரையும் ஒன்று சேர்க்க வேண்டுமே தவிர பிரிவினை இருக்கக்கூடாது. வடக்கிலும் கிழக்கிலும் தான் எதிர்கால காற்பந்தாட்ட வீரர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் உண்மையான விடயம்.
இன்று இலங்கையின் தேசிய அணியினை எடுத்துப் பார்த்தால் கொழும்பினை சேர்ந்த மூன்றோ நான்கு பேரை தவிர மற்றைய அனைத்து வீரர்களும் கிராமத்தில் இருந்து வந்தவர்கள்தான் இருக்கின்றார்கள்.
தேசிய அணி
எங்கே திறமை இருக்கின்றதோ அந்த திறமைகளுக்கான கதவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. இளைஞர் தேசிய அணிக்கு விளையாட உங்களைப்போன்ற வீரர்கள் இந்த மண்ணில் இருக்கின்றார்கள்.
இந்நிலையில், நாங்கள் செய்ய வேண்டிய விடயங்களை கழகங்களாக நீங்கள் செய்து கொண்டிருப்பதற்கு எமது நன்றிகள். மிக விரைவில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தினால் யூத் லீக் 16 மற்றும் 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தேசிய ரீதியிலான பல போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த மண்ணிலும் அது நடைபெறும். அதனால் நீங்கள் சர்வதேச அளவில் செல்லக்கூடிய வாய்ப்புக்கள் எதிர்காலத்தில் இருக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |