வெவ்வேறு சம்பவங்களில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நால்வர் கைது (Photos)
வடமராட்சி - நெல்லியடி பகுதியில் பொலிஸாரின் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 60 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (26.09.2022) துன்னாலை முள்ளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நெல்லியடி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே காட்டுப்பகுதிக்குள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு இருந்த 35 வயது மற்றும் 50 வயதுடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட கசிப்பு மற்றும் சான்றுப் பொருட்களும் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை
வாழைச்சேனை - நாவலடி பகுதியில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று (26.09.2022) நடந்துள்ளது.
வாழைச்சேனை நாவலடி பிரதேசத்தில் இருந்த வீடொன்றில் தங்க நகை, சைக்கள் வெளிநாட்டு பால்மா டின்கள் பாஸ்மதி அரிசி மூடை , வாகன என்ஜின் ஒயில், ஒலிவ் ஒயில் அடங்கிய கலன்கள் போன்ற பல பெறுமதி வாய்ந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.
ஆரம்ப கட்ட விசாரணை
சுமார் பதினேழு லட்சம் பெறுமதியான பொருட்கள், வீட்டு உரிமையாளர்கள் இல்லாத நேரத்தில் மின்சாரம் தடைப்பட்ட வேளையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அபூபக்கர் ரஸாக் மற்றும் அலி என்ற பெயருடைய இருவரே வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வாழைச்சேனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: பதுர்தீன் சியான்