யாழில் தொடர் திருட்டுகளுடன் தொடர்புடைய நால்வர் கைது! பெறுமதியான நகைகள் மீட்பு
யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் நகை, பணம் மற்றும் பொருள்களைத் திருடிய சம்பவங்களுடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். நகரின் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில், 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான வளையல்கள் திருடப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் அண்மையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொலிஸார் விசேட நடவடிக்கை
அதேபோன்று, கலட்டி அம்மன் கோயில் பகுதிக்கு அருகிலுள்ள வீடுகளில் புகுந்து 3.5 பவுண் தங்க மோதிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன திருடப்பட்டமை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

இந்தத் தொடர் திருட்டுச் சம்பவங்கள் குறித்து விசேட விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார், நான்கு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், விசாரணைகளின் பின்னர் அவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையையும் எடுக்கப்பட்டுள்ளது.