காற்றாலை போராட்டத்துக்கு பின்னால் முன்னாள் அரசியல்வாதிகள்: கூறுகின்றார் கடற்றொழில் அமைச்சர்
மன்னார் காற்றாலைக்கு எதிரான போராட்டத்திற்கு பின்னால் முன்னாள் அரசியல்வாதிகள் உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணம் - சங்கானையில் வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசியல்வாதிகள்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் காற்றாலை அமைப்பதற்கு திறப்புவிழா நடாத்தியவர்கள், காற்றாலைகளுக்கு பின்னால் ஓடியவர்கள், அந்த காற்றாலை கம்பனிகளுகளிடம் கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டவர்கள் முன்னைய அரசியல்வாதிகள்.
அந்த அரசியல்வாதிகளே இந்த போராட்டத்தின் பின்னால் இருக்கின்றனர்.
அமைச்சர் கூறும் விடயம்
நாங்கள் கூறுவது யாதெனில், இது மக்களது பிரச்சினையாக இருக்குமாக இருந்தால், இது மன்னாருடைய பிரச்சினையாக இருக்குமாக இருந்தால், இந்த பிரச்சினையால் மன்னார் மூழ்குமாக இருந்தால் அது பற்றி வேதனை அடைபவர்கள், அதனை தடுத்து நிறுத்துபவர்கள் வேறு யாருமல்ல நாங்கள் தான்.
அதனால் இந்த காற்றாலை சம்பந்தமான பிரச்சினைக்கு உரிய மக்களுடன் பேசி கூடிய சீக்கிரத்தில் தீர்வுகளை பெற்றுக் கொடுப்போம் என்றார்.



