மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து - அச்சத்தில் ராஜபக்ச குடும்பத்தினர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் குடியேறியுள்ளார்.
இந்தச் சட்டத்திற்கமைய, ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட போக்குவரத்து வசதிகளும் திரும்பப் பெறப்படும். அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட வாகனங்களும் ஒப்படைக்கப்படவுள்ளன.
குண்டு துளைக்காத கார்
குண்டு துளைக்காத கார் மற்றும் டொயோட்டா லேண்ட் ரோவர் 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டன.
குண்டு துளைக்காத கார் பழுதுபார்ப்பதற்காக பல மாதங்களாக மாத்தறையில் வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழுதுபார்ப்பு பணி இன்னும் முடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், வாகனத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு மகிந்த தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
லேண்ட் ரோவர் நேற்று தங்காலையிலிருந்து கொழும்புக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகள்
அதற்கமைய, இரண்டு வாகனங்களும் இல்லாத நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிக்க வாகனங்கள் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.
குண்டு துளைக்காத வாகனம் இல்லாததால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்து அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் போக்குவரத்துக்காக இரண்டு ஓட்டுநர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்தனர், மேலும் இந்த இரண்டு நியமனங்களும் நேற்று முன்தினம் முதல் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



