மர்மமான முறையில் உயிரிழந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர்.. மொட்டு கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டு
இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெறும் உயிரிழப்புகள் தொடர்பில் முறையான விசாரணைக்கு முன்னரே அவை உயிர்மாய்ப்பு எனத் திட்டமிட்டுச் சித்தரிக்கப்படும் போக்குக் காணப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மறைவு குறித்துத் தனது இரங்கலைத் தெரிவித்த மனோஜ் கமகே, கபில சந்திரசேன மற்றும் திறைசேரி அதிகாரி உள்ளிட்டோரின் மரணங்களின் போது, உடல்கள் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு முன்னரே அவை உயிர்மாய்ப்பு எனச் செய்திகள் பரப்பப்பட்டது என்றார்.
மரண பரிசோதனை
"ஒரு மரணம் இயற்கையானதா, உயிர்மாய்ப்பா அல்லது கொலையா என்பதை மரண பரிசோதனையே தீர்மானிக்க வேண்டும். ஆனால், முறையான விசாரணைகளின்றி இவ்வாறான முடிவுகளை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடுவது பாரதூரமான நிலை" என்று அவர் எச்சரித்தார்.

மேலும், அரசை விமர்சிக்கும் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால் என்றும், அதேபோல், நீதியரசர்களுக்கு அழுத்தம் கொடுத்து, நீதித்துறையையும் அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படுகின்றது என்றும் அவர் சாடினார்.
"அரசமைப்பை மாற்ற மாட்டோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று தங்கள் தேவைக்காக அனைத்தையும் தலைகீழாக மாற்றத் துடிக்கின்றனர்.
பொலிஸ் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை ஏற்கனவே சீர்குலைந்துவிட்டது. இந்தநிலையில், நீதித்துறையின் கௌரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டியது சட்டத்தரணிகள் மற்றும் நீதியரசர்களின் பொறுப்பாகும்.
ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உடனடியாக வீதிக்கு இறங்கி தலைமைத்துவத்தை வழங்க வேண்டும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்” என்றார்.
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri