கென்யாவில் எபோலா தடுப்பு மையத்தில் 7 அமெரிக்கர்கள் தனிமைப்படுத்தல்
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் பணியாற்றிய ஏழு அமெரிக்கத் தொண்டு ஊழியர்கள், கென்யாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் தங்களைச் சுயவிருப்பத்தின் பேரில் 21 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
கொங்கோவிலிருந்து அமெரிக்கா திரும்பும் குடிமக்கள் அனைவரும் தங்களது தாய்நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக, ஒரு மூன்றாம் நாட்டில் மூன்று வாரங்கள் தங்கியிருக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் கென்யாவின் விமானப் படைத் தளத்தில் கட்டப்பட்டு வரும் இந்த 50 படுக்கைகள் கொண்ட உயிரியல் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அந்த நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தனிமைப்படுத்தல்
எபோலா தொற்றால் ஏற்படக்கூடிய சுகாதார அபாயங்களை அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது சுமத்துவதாகக் கென்யர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த மையத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகச் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
நீதிமன்ற உத்தரவை மதிக்காததால் கென்ய சுகாதார அமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் எவ்வித எபோலா அறிகுறிகளும் இன்றி அமெரிக்கப் பொதுச் சுகாதாரப் பிரிவின் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய எபோலா பரவல் கொங்கோவில் 828 பேரை பலிவாங்கியுள்ளதுடன், இதற்குத் தடுப்பூசியோ முறையான சிகிச்சையோ இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.