கடலில் நீராடச் சென்ற சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி பலி
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச் சென்ற 49 வயதான நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று(26.07.2026) இடம்பெற்றுள்ளதாகவும், குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணை
முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்த நபர் நிலாவெளி பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் (TDHA) தலைவர் குமார் ஜெயக்குமாரன் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது, கிடைத்துள்ள தகவலின்படி, குறித்த சுற்றுலாப் பயணி நிலாவெளி பகுதியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த நிலையில் கடலில் நீராடச் சென்றபோது இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை திருகோணமலை பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
உயிரிழப்புகள் ஏற்படாத வகையில்
உயிர்காக்கும் (Lifeguard) சேவைகள், எச்சரிக்கை கொடிகள், பல்மொழி பாதுகாப்பு அறிவிப்புப் பலகைகள், அவசர மீட்பு உபகரணங்கள், அபாயப் பகுதிகளைத் தெளிவாகக் குறியிடுதல் மற்றும் ஒருங்கிணைந்த கடற்கரை பாதுகாப்பு முகாமைத்துவம் போன்ற பல்வேறு பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இலவச ஆலோசனையாக வழங்கியுள்ளோம்.

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையின் பிரதான பங்குதாரர்களில் ஒருவராக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், உலகத் தரத்திலான சுற்றுலா இலக்காக திருகோணமலையை உருவாக்கவும், அரச நிறுவனங்கள், பாதுகாப்பு தரப்புகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு எமது சங்கம் என்றும் தயாராக உள்ளது.
இந்த துயரமான சம்பவம், கடற்கரை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.
இனி இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் உடனடி மற்றும் நடைமுறைசார் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம்“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.