யாழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி - நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விழிப்புடன் இயங்கும் கும்பல்..
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களிடம் கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ். மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மோசடிகள் அதிகரிப்பு
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இவ்வாறான மோசடி சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடிகளுடன் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளதாகவும், அவற்றில் அதிகபட்சமாக ஒருவரிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபா வரையில் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் போலியான விளம்பரங்களை நம்பியே பெருமளவானோர் இவ்வாறு பணத்தை இழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
நள்ளிரவு 12 மணிக்கு பின் நடக்கும் சம்பவம்
கனடா, பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எவ்வித செலவுமின்றி அனுப்பி வைப்பதாகக் கூறியே இந்த போலியான விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை நம்பி தொடர்புகொள்ளும் நபர்களிடம் முதலில் ஒரு தொகைப் பணத்தை வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு காட்டுமாறு கூறுவதாகவும், பின்னர் அவர்களின் வங்கிக் கணக்கு கடவுச்சொல் உள்ளிட்ட தகவல்களைப் பெற்று, நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் பணத்தை மோசடியாக எடுத்துக்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தொடர்பான போலியான விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்காமல், பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சூட்கேஸில் இருந்தது மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம் News Lankasri