முல்லைத்தீவில் விசாரணைகள் ஆரம்பம்! நிறைவிற்கு கொண்டுவரப்பட்ட கடற்தொழிலாளர்களின் போராட்டம் (video)
முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த கோரியும், அதற்கு உந்தையாக இருக்கும் அதிகாரிகளை இடமாற்றக் கோரியும் கடற்தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
24 கடற்தொழிலாளர் சங்கங்களை சேர்ந்த குறித்த போராட்டம் நேற்றைய தினம் (06.10.2022) நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
விசாரணை ஆரம்பம்
இந்த நிலையில் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குழு நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரியாத்தை மண்டபத்தில் இது தொடர்பான விசாரணையினை ஆரம்பித்திருந்தது.
இதன்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கடற்தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாசம் மற்றும் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் ஆகியோர் தங்கள் முறைப்பாட்டினை விசாரணைக்குழுவிடம் முன்வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, தடை செய்யப்பட்ட தொழில் தேவை என வலியுறுத்தும் கடற்தொழிலாளர் அணியின் பிரதிநிதிகளும் விசாரணைக்கு அழைக்கபட்டுள்ளனர்.
நிறைவிற்கு கொண்டு வரப்பட்ட போராட்டம்
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே, தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வந்த கடற்தொழிலாளர்கள் தமது போராட்டத்தினை நேற்றுடன் நிறைவிற்கு கொண்டு வருவதாக அறிவித்திருந்தனர்.
இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் அ.அருள்நாதன் கூறுகையில், விசாரணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் நல்ல பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை நிறைவிற்கு கொண்டு வருகிறோம், தவறும் பட்சத்தில் அடுத்தகட்டம் என்ன செய்யாலம் என்று சங்கங்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின், கடல் வளத்தினை பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பது மீனவர்களின் நீதியான கோரிக்கை.
விசாரணைக்குழுவினால் அறிக்கை மாத்திரமே சமர்ப்பிக்க முடியும். மக்களுக்கு சாதகமானதும் நீரியல் துறைக்கும் சாதகமானதுமான முறையில் அறிக்கை சமர்ப்பிப்பதாக உத்தரவாதம் கொடுத்துள்ளார்கள்.
விசாரணைக்குழுவானது போராட்டக்காரர்களிடம் “போராட்டத்தினை நிறைவு செய்யுங்கள். 12ஆம் திகதி விசாரணை அறிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கும். அவ்வாறு அறிக்கையில் திருப்தி இல்லை என்றால் போராட்டத்தினை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்” என்றும் கோரியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.