யாழில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களின் திருவிழாக்கள் ஆரம்பம் (Photos)
வரலாற்று சிறப்புமிக்க பல ஆலயங்களில் வருடாந்த திருவிழாக்கள் ஆரம்பமாகியுள்ளன.
அதற்கமைய, தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பமாகியுள்ளது. ஆலயத்தின் திருவிழா நேற்று(27) பிற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
திருவிழாவில் எதிர்வரும் 5 ஆம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவன தேர் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 6 ஆம் திகதி கைலாச வாகனமும், புரட்டாதி 8 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 9ஆம் திகதி காலை 9 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து மறுநாள் 10 ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழா நடைபெற்று அன்றே மௌனத் திருவிழாவும், அடுத்த நாள் பூக்காரர் பூசையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம்
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக கோவிட் தொற்றுக் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் திருவிழா நடைபெற்றது.
இந்த ஆண்டு சிறப்பாக நடைபெறவுள்ள பெருந்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமையவே பெருந்திருவிழாவுக்கான விசேட ஏற்பாடுகள் தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அன்னதானம், குடிநீர், போக்குவரத்து, வாகனத் தரிப்பிடங்கள், உணவகங்கள், தற்காலிக வியாபார நிறுவனங்கள், சாரணர் சேவை, மின் விநியோகம், அடியவர்களின் பாதுகாப்பு, சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்தல், ஆலயத் துப்புரவுப் பணி, மலசலகூட துப்புரவுப் பணி, வீதி செப்பனிடல் உள்ளிட்ட விசேட ஒழுங்குகள் அந்தந்தத் துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அடியவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்
அத்துடன் ஆலயத்துக்கு வரும்போது அடியவர்கள் உடைமைகள், நகைகள் என்பவற்றைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறில்லையேல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆலயச் சுற்றுப் புறத்தில் பொலிஸார் விசேட கடமையில் அமர்த்தப்படுவார்கள்.
எனவே, பக்தர்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் பொலிஸாரையும் ஆலய நிர்வாகத்தினரையும் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: ராகேஷ்







உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
