முல்லைத்தீவில் வீதியில்லாமல் அவதியுறும் விவசாயிகள் : நிலைமையை நேரில் சென்று ஆராய்ந்த ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட, தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்லும் வீதி சேதமடைந்துள்ளதாகவும், விளாத்தியடி இறக்கப் பாலம் உடைப்பெடுத்துள்ளதாகவும் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சூழலில் தற்போது அக்கரைவெளியில் அறுவடை செய்யப்பட்ட 5000 வரையிலான நெல் மூட்டைகள் அங்கிருந்து எடுத்துச் செல்ல முடியாமல் வயல்வெளிகளிலும், வீதிகளிலும் நீண்டநாட்களாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகளின் முறையீட்டிற்கு அமைவாக அப்பகுதிக்கு நேற்றைய தினம் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விவசாயிகள் எதிர்நோக்கும் பாதிப்புநிலமைகள் தொடர்பில் பார்வையிட்டதுடன், விவசாயிகள் எதிர்நோக்கியள்ள பாதிப்பு நிலமைகளைச் சீர்செய்வதற்கு தம்மால் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
5000 வரையிலான நெல் மூடைகள் பாதிப்பு
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையப் பிரிவில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளி பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக்கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதியினைச் சேர்ந்த விவசாயிகளும், திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப்புறக்கிராமமான தென்னமரவடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் சுமார் 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களில் நெற்செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அக்கரைவெளி விவசாய நிலப் பகுதிக்குச்செல்லும் வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாலும், குறித்த வீதியில் அமைந்துள்ள விளாத்தியடி இறக்கப் பாலம் உடைப்பெடுத்துள்ளதாலும் அப்பகுதியில் நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்படும் பெரும்போக நெல்லினை அங்கிருந்து எடுத்துச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் குறிப்பாக 800 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களில் அறுவடைமேற்கொள்ளப்பட்ட 5000 வரையிலான நெல் மூடைகள் அங்கிருந்து எடுத்துச்செல்லமுடியாத நிலையில் வீதியோருங்களிலும், வயல்வெளிகளிலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு எடுத்துச் செல்ல முடியாத நிலையில் 15நாட்கள் வரையில் அங்கு நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் நெல்மூட்டைகள் மூழ்கிப் பாதிப்படைந்துள்ளன.

இதனால் அக்கரைவெளியில் தற்போது 200இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதனைவிட இன்னும் அறுவடைசெய்ய வேண்டிய நிலையில் பல நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் அக்கரைவெளியில் காணப்படுகின்ற போதும் குறித்த வீதிப் பாதிப்பால் விவசாயிகள் அறுவடை செய்வதிலும் தயக்கங்காட்டி வருகின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கை
இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் முறையீட்டிற்கு அமைவாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கொக்கிளாய் புளியமுனைப் பகுதியிலிருந்து, கொக்கிளாய் களப்பினூடாக படகில் குறித்த அக்கரைவெளிப்பகுதிக்கு நேரடியாகச்சென்று விவசாயிகள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பில் நேரடியாகப் பார்வையிட்டுள்ளார்.
இதன்போது, விவசாயிகளால் உடைப்பெடுத்துள்ள விளாத்தியடி இறக்கப் பாலம் காண்பிக்கப்பட்டதுடன், தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளையும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் காண்பித்தனர்.

அதேவேளை, குறித்த விளாத்தியடி இறக்கப்பாலத்தினைத் தற்காலிகமாகச் சீர்செய்து தாம் தற்போது அறுவடை செய்யும் நெல்லை எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நீண்டநாட்களாக, அடுக்கிவைக்கப்பட்ட நெல்மூட்டைகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததாலும் சந்தைப்படுத்த முடியாத நிலையில் காணப்படும் தமது நெல்லிற்கு இழப்பீடுகளைப் பெற்றுத் தருவதுதொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
நிதி ஒதுக்கீடு
இந்நிலையில், கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு உடனடியாக தொலைபேசி அழைப்பெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர், விவசாயிகளின் பாதிப்பு நிலை தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல் நிலமைகளைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல் தொடர்பில் உரிய தரப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பு நிலையை தீர்க்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தலுக்கமைய, கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணியிலிருந்து அக்கரைவெளி வரைக்குமான பாதையைச் சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், விரைவில் அந்த வீதியைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan
நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை News Lankasri