ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தெரிவத்தாட்சி அலுவலருடன் சந்திப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுடன் கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்று (26.09.2024) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கை
இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர்,
யாழ்ப்பாணத்தில் தம்மால் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியமைக்காக தெரிவத்தாட்சி அலுவலருக்கும், உத்தியோகத்தர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்ததுடன், தேர்தல் சிறப்பாகவும் சமூகமாகவும் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் யாழ்ப்பாணத்தின் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும், தம்முடன் பல முன்னாயத்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டமைக்காக தெரிவத்தாட்சி அலுவலர் என்கின்ற ரீதியில் அரசாங்க அதிபர் தமது நன்றியினை கூறியுள்ளார்.
மேலும், இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் கண்காணிப்பாளர்கள் நிக்கோலஸ் குகூலிஸ் மற்றும் ஜோஹான்னா வான் சம்பீக் மற்றும் மாதுமை பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.