அரசாங்கத்திடம் நாமல் விடுத்துள்ள கோரிக்கை!
நாட்டில் தற்போது எவ்வாறான பொருளாதார கொள்கை செயற்படுத்தப்படுகிறது என்பதை அரசாங்கம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (13) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வாக்குறுதி
அவர் மேலும் தெரிவித்ததாவது,''பொருளாதார ரீதியில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் போட்டியிடுவோம். பெரும்பாலான தொகுதிகளை நாங்கள் கைப்பற்றுவோம். உள்ளுராட்சிமன்ற அதிகாரத்தில் இருந்து முழுமையாக அதிகாரத்தை கைப்பற்றுவோம்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டுக்கு பொருத்தமற்றவை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் அழுத்தமாக குறிப்பிட்டார். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அதே கொள்கைகளையே நடைமுறைப்படுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை
75ஆண்டுகால அரசியலை சாபம் என்று விமர்சிக்கும் ஜனாதிபதி உட்பட ஆளும் தரப்பினர்கள் இலவச கல்வியையும், இலவச சுகாதார சேவையையும் பெற்றுக்கொண்டதை மறக்க கூடாது.
ஆகவே அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை எத்தன்மையானது என்பதை ஆட்சியாளர்கள் எடுத்துரைக்க வேண்டும்.
தேசபந்து தென்னகோனை பொலிஸார் நாடு முழுவதும் தேடுகின்றனர். நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் பொலிஸார் சிவில் உடையில் அரசியல்வாதிகளின் வீடுகளை சோதனை செய்கிறார்கள். பொலிஸ் திணைக்களம் சுயாதீனமாக செயற்படுகிறதா என்பது கேள்விக்குறியாக காணப்படுகிறது.'' என கூறியுள்ளார்.
