எதிர்வரும் அக்டோபர் 4ம் திகதி விசாரணைக்கு வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக நௌபர் மௌலவி உட்பட 25 குற்றவாளிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை எதிர்வரும் அக்டோபர் 4ம் திகதி விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்ற ட்ரையல் அட் பார் அமர்வு தீர்மானித்துள்ளது.
அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகள் தமித் தொட்டாவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய விசாரணை அமர்வு, குற்றம் சுமத்தப்பட்டவர்களை அக்டோபர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, சிறை அதிகாரிகள் மூலம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
அன்றைய தினத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
ஏற்கனவே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக, அலட்சியம் மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க தவறியது தொடர்பில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்பு செயின்ட் தேவாலயம், கடுவாப்பிடிய தேவாலயம் உட்பட்ட எட்டு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக நௌபர் சஜித் மௌலவி, முகமது மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆதம் லெப்பை அல்லது கஃபூர், முகமது சனாஸ்டீன் மற்றும் முகமது ரிஸ்வான் உட்பட 25 பேருக்கு எதிராகவும் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி, 269 பேரைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலில் 25 பேருக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.
கொலைக்கு சதி செய்தல், உதவி செய்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேகரித்தல் மற்றும் கொலை முயற்சி செய்ததற்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.