அமெரிக்காவின் இந்தோ–பசிபிக் மூலோபாயத்தில் இலங்கைத்தீவு
பூகோளம் தழுவிய அரசியலில் இன்றைய 21ம் நூற்றாண்டின் முதல் காலாண்டு கடக்கின்ற நிலையில் வல்லரசுகளும், வல்லமை வாய்ந்த அரசுகளும், பிராந்திய அரசுகளும், தமக்கு இடையேயான அரசியல் பொருளியல் போட்டியும், முரண்களும் முட்டி மோதும் களமாக இந்தோ–பசிபிக் பிராந்தியம் உருவெடுத்துள்ளது.
சீனாவின் வேகமான எழுச்சி, கடல் வழித் வர்த்தகப் பாதைகள், தொழில்நுட்ப ஆதிக்கம், மற்றும் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவற்றின் பாதுகாப்பு கூட்டணிகள் காரணமாக இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் சீனா என்ற பெரும் சக்திகளின் போட்டி தீவிரமடைந்துள்ளது.
கேந்திர ஸ்தானமாக இருக்கும் இலங்கை
அமெரிக்காவின் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கை இந்த பிராந்தியத்தில் இலங்கை தீவு முக்கிய இடத்தைப் பெற்று வருவதற்கான காரணங்கள் என்னவென நோக்கினால், இலங்கை ஒரு சிறிய நாடு, ஆனால் அது இந்து சமுத்திரத்தின் கேந்திர ஸ்தானத்தில் அமைந்திருப்பதனால் மூலோபாய கேந்திரத் தன்மை பெறுகிறது.
இது இந்தோ–பசிபிக்- அட்லாண்டிக் கடல் இணைப்பு வர்த்தகப் பாதைகளின் மையம். அத்தோடு இந்து மகா கடலின் முக்கிய துறைமுகங்கள் இந்த தீவில் உள்ளது. வல்லரசுகள் தங்கள் நலனுக்காக பயன்படுத்த ஏதுவாகிறது.

இந்தியா - சீனா - அமெரிக்கா ஆகியவற்றின் அரசியல் பொருளியலுக்கான புவியியல் மையத்தில் அமைந்துள்ளமையால் இலங்கையை பெரும் சக்திகளின் மூலோபாய போட்டியின்(Strategic Competition) புவிசார் அரசியல் முனையாக(Geopolitical Node) இன்று முக்கியத்துவம் பெறுகிறது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா ஒரு எழும் அரசியல் பொருளியல் ராணுவ பிராந்திய சக்தியாகவும், அதனுடைய பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்குவதால் மூலோபாய ரீதியாக இலங்கைத் தீவு முக்கியமான நாடாகவும் என்றுமில்லாத அளவு தற்போது மாற்றமடைந்து இருக்கிறது.
அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் இந்து சமுத்திரத்தில் தத்தமது நிலையை பலப்படுத்துவதற்கும் மேலாண்மை படுத்துவதற்கும் இலங்கைத் தீவை பயன்படுத்த முனைகிறார்கள்.
இந்நிலையில், இந்த நாடுகளின் அணுகுமுறைகள், இலக்குகள் மற்றும் செல்வாக்கு வல்லமைகளை ஒப்பீட்டு ஆராய்வது முக்கியமானதாகும். இந்துமாக்கடல்(Indian Ocean) என்பது இந்த நூற்றாண்டின் முக்கியமான புவியியல் - அரசியல் (Geo-political) தளமாகவும் உலகின் சுமார் 60% கடல் வர்த்தகம், எண்ணெய் போக்குவரத்து, மற்றும் முக்கிய கடற்படை வழித்தடங்கள் இந்துமாக்கடல் வழியாகச் செல்கின்றன.
இந்தப் பின்னணியில் இலங்கையுடன் அமெரிக்கா SOFA (Status of Forces Agreement) மற்றும் ACSA (Acquisition and Cross-Servicing Agreement) போன்ற ராணுவ - சட்ட ஒப்பந்தத்தை செய்து இந்துமாக்கடலில் தங்களின் அதிகாரம், செல்வாக்கு மற்றும் ராணுவ இருப்பை சட்டபூர்வமாக உறுதி செய்யும் கருவியாக முயன்றும் அது முழுமைபெறாமல் தடைப்பட்ட நிற்கிறது.
SOFA என்றால் என்ன?
SOFA என்பது, ஒரு நாடும் மற்றொரு நாட்டின் வெளிநாட்டு படைகளும் இடையே கையெழுத்தாகும் Status of Forces Agreement எனப்படும் ஒரு உடன்படிக்கை அல்லது சட்ட ஒப்பந்தம்.

இது அந்த வெளிநாட்டு படைகளின் சட்ட நிலை, நுழைவு, பயணம், வரி, நீதித்துறை அதிகாரம், மற்றும் உள்ளூர் சட்டங்களுடன் உள்ள உறவு ஆகியவற்றை வரையறுக்கிறது. SOFA ஒரு போர் உடன்படிக்கை அல்ல, ஆனால் அது ராணுவ இருப்பை நீடித்ததாக மாற்றும் சட்ட அடித்தளமாக செயல்படும்.
இத்தகைய, ஒப்பந்தத்தை பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா - ஜப்பான் SOFA மற்றும் அமெரிக்கா – தென்கொரியா SOFA என்பன சிறந்த உதாரணங்களாகும்.
இவை போருக்கான நேரடி உடன்படிக்கை மற்றும் ஆயுத ஒத்துழைப்பு உடன்படிக்கை அல்ல, ஆனால் அவர்களின் படைகள் மற்றும் ஒத்துழைப்பு பணியாளர்கள் குறித்த சட்டச் விதிமுறைகளை ஒழுங்கமைக்கும் சட்ட வடிவமைப்பு தான்.
அமெரிக்கா முதன்முதலில் இலங்கையுடன் கடந்த 1995 பெப்ரேவரி 9 மற்றும் மே 16 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட Exchange of Notes (குறிப்புகளின் பரிமாற்றம்) மூலம் SOFA ஒப்பந்த உடன்பாடு கையெழுத்தாக்கி செயல்பாட்டில் இருந்தது என அதிகாரப்பூர்வமான பதிவு உள்ளன.
ஆயினும், இதுவொரு ஆரம்ப அடிப்படை உடன்படிக்கையாகும்(basic SOFA-type agreement). குறிப்பாக, அமெரிக்க படை மற்றும் அவர்களின் அதிகாரிகள் இலங்கையில் பயிற்சி, பயணம் மற்றும் அந்த நேரத்தில் உள்ள வர்த்தக மற்றும் வேலை நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க உதவியது.
SOFA உடன்படிக்கை
மேற்கு - மத்திய ஆசியா பகுதியில் இஸ்லாமிய இராணுவத்துடனான யுத்தகாலத்தில் அமெரிக்கா இந்து சமுத்திரத்தில் தனது பிடியை வலுப்படுத்த இலங்கையுடன் ஏற்கனவேயிருந்த ஆரம்ப அடிப்படை SOFA உடன்படிக்கையின் போதாமை காரணமாக Acquisition and Cross-Servicing Agreement (ACSA) எனப்படும் “வாங்கல் மற்றும் பரஸ்பரசேவை வழங்கல் ஒப்பந்தம்“ என்ற ஒன்று 2007-03-05ல் இலங்கை அன்றைய பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளேக் ஆகியோரால் கொலம்போவில் வைத்து கைச்சாத்தாகியது.
இந்த Acquisition and Cross-Servicing Agreement (ACSA) என்பது இரு நாடுகளின் ஆயுதப்படைகள் பொருட்கள் மற்றும் தரவு பரிமாற்றம், ஆதரவு மற்றும் மறுசுழற்சி சேவைகள் போன்றவற்றை பரிமாறிக் கொள்ள அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தமாகும்.

இது நிலையான படை ஒத்துழைப்பை துரிதப்படுத்த தயாரிக்கப்பட்டது. இதனை இராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கை அல்லது ஆயுதக் கூட்டணியாகக் கருதக்கூடாது என்று அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டது.
இந்த ACSA ஒப்பந்தம், சாதாரணமாக 10 ஆண்டுகளுக்கு அதாவது, மார்ச் 2017 வரை இருந்தது, பின்னர் புதிய ACSA ஓகஸ்ட் 2017ல் இலங்கை மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்தானது.
ஆயினும், இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் தேவையை நிவர்த்தி செய்யவில்லை. கொரோனா பேரிடருக்கு பின்னர் உலகளாவிய அரசியலில் இந்துமாக்கடல் முக்கிய போட்டிக்களமாக மாறிவிட்டது.
இந்துமாக்கடலில் ஆசியா – ஆப்பிரிக்கா – மத்திய கிழக்கு இணைப்புப் பாதைகளான மலாக்கா நீரிணை (Strait of Malacca), ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz), செங்கடலின் பாப்-எல்-மந்தெப் (Bab-el-Mandeb), நன்நம்பிக்கைமுனை போன்ற உலக வர்த்தகத்திற்கு அத்தியாவசியமான கடல்வழி நுழைவுப்பாதைகளை கொண்டுள்ளதால் அமெரிக்கா, சீனா இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய பொருளாதார சக்கிமிக்க நாடுகள், இந்துமாக்கடலில் தங்களின் பாதுகாப்பு, மற்றும் செல்வாக்கை உறுதி செய்ய முயல்கின்றன.
இந்நிலையில், அமெரிக்கா புதிய விரிவான சோபா(SOFA) ஒப்பந்தத்திற்கான வரைபை(Draft SOFA) 2018 ஆகஸ்ட் 28 அன்று அமெரிக்க தூதரகம் மூலம் இலங்கை வெளிநாட்டு அதிகாரிக்கு அனுப்பப்பட்டது.
இதில், அமெரிக்க படைகள் மற்றும் அவர்களது ஊழியர்கள் குறித்த மேலதிக ஆணைகள், நடைமுறைகள் மற்றும் அதிகமான காப்புரிமைகள், சட்ட வரம்புகள் இடம் பெற்றிருந்தன.
அமெரிக்கா முன்மொழிவு(draft SOFA) என்பது கடந்த 1995 ஒப்பந்தத்தை விரிவாக மாற்றுவதற்கான முயற்சியாகும்.
இதன் முக்கிய உள்ளடக்கங்களாவன,
1)அமெரிக்க படைகள் இலங்கையின் எந்த பகுதிக்கும் செல்ல அனுமதி.
2)படையணிகள் மற்றும் ஆயுதம் தாங்கிய படைவீரர்கள் இராணுவச் சீருடையை அணிந்து இருக்க அனுமதி.
3)கடவுச்சீட்டின்றி அமெரிக்க அடையாள அட்டையை மட்டும் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழையவும் வெளியேறவும் அங்கீகாரம்.
4)இலங்கை சட்டத்துக்குள் உள்ளடக்கப்படாத தனி காப்புரிமை.
5)வரி/சுங்க தீர்வைக்க உட்பட சில சட்டம்சாராத விதிவிலக்குகள்.
இந்த SOFA திட்டம் தொடர்பாக இலங்கைப் பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள், இதில் இலங்கை அரசின் சுயாதீனம் மற்றும் சட்டமூலம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
நோக்கங்கள்
அதனையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த 2019-ல் நாடாளுமன்றத்தில் “புதிய SOFA ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்திடவில்லை1995 ஒப்பந்தம் தான் நிலவும்“ என்று தெரிவித்தார்.
இவ்வாறு நீண்ட இழுபறிகளுக்கு மத்தியில் இந்த நாள் வரையிலும் புதிய SOFA கையெழுத்திடவில்லை.
அமெரிக்காவின் இந்த இலங்கையுடனான SOFA ஒப்பந்தத்தின் நோக்கங்கள்
1.சீனாவின் கடல் விரிவாக்கத்தை கட்டுப்படுத்துதல்.
2.முக்கிய கடல் வழித்தடங்களை பாதுகாத்தல்.
3.கூட்டணி நாடுகளில் வேகமான ராணுவ அணுகல் (Rapid Access) பெறுதல்.
4.நிரந்தர தளங்கள் இல்லாமலே நிரந்தர இருப்பு உருவாக்குதல்.
இந்த நோக்கங்களை அடைய, SOFA ஒப்பந்தம் ஒரு “சந்தடியற்ற இராணுவத்தளமாக“ (“Silent Military Base”) செயல்படும்.
இலங்கை இந்துமாக்கடலின் மையத்தில் கிழக்கு–மேற்கு வர்த்தக கடல் வழித்தடங்களுக்கு அருகில் கொழும்பு, திருகோணமலை, ஹம்பந்தோட்டை ஆகிய துறைமுகங்கள் இருப்பதனால் SOFA இருந்தால் அமெரிக்க படைகள் விசா இல்லாமல் வரலாம், நாட்டின் எந்த பகுதியிலும் இயங்கலாம், சட்டத் தடைகள் இருக்காது.

அதேநேரம், இலங்கை அமெரிக்க–சீனா போட்டியில் முக்கிய ராணுவ இணைப்புப் புள்ளியாக மாறும். இலங்கையுடனான அமெரிக்க SOFA ஒப்பந்தம் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்திற்கு சவால் விடுவதோடு சீனா - அமெரிக்கா போட்டியில் இந்தியாவை இடைநிலைக்கு இட்டுச் செல்லும்.
இலங்கையில் இந்தியாவின் ஈளுகைச் செல்வாக்கை பின்தள்ளும். அதேநேரம், சீனாவின் Belt and Road Initiative (BRI)“String of Pearls” (துறைமுக வலையமைப்பு) பின்தள்ளி SOFA மூலம் அமெரிக்கா சீனக் கடல் பாதைகளை கண்காணிக்க முடியும், சீன முதலீடுகள், உள்ள நாடுகளில் ராணுவ அழுத்தம் போன்றவற்றை உருவாக்க முடியும்.
இதனால் தான் அமெரிக்க - இலங்கை SOFA ஒப்பந்த முயற்சிகளை “புதிய காலனிய ராணுவ அரசியல்“ என விமர்சிக்கிறது. அதனை குழப்பி விட்டது என்பது சீனாவுக்கு இந்துமாக்கடல் மூலோயா உத்தியில் அதற்கு கிடைத்த வெற்றிதான்.
இந்த சூழலிலும் அமெரிக்கா தன் மூலோபாய செல்வாக்கை எவ்வாறு விரிவுபடுத்துகிறது என்பதையும், அதனுடன் தொடர்புபடுத்தி இலங்கையின் பலாலி விமானப்படைத் தளத்தில் நிவாரணப் பணிக்காக அமெரிக்க இராணுவம் தரையிறங்கியதை அரசியல் தத்துவார்த்த அடிப்படையில் ஆராயலாம்.
அமெரிக்காவின் இந்தோ–பசிபிக் உத்தி (Indo-Pacific Strategy) என்பது வெறும் இராணுவ மேலாதிக்கம் அல்ல, இராணுவம், பொருளாதாரம், கருத்தியல், நிறுவனங்கள் உள்ளடக்கிய Hard Power மற்றும் கலாசாரம், மதிப்பீடுகள், நம்பகத்தன்மை (Soft Power) ஆகியவற்றை அறிவுடன் இணைத்து இலக்கை அடைவது என அனைத்தையும் ஒருங்கிணைத்த ஒரு முழுமையான மூலோபாயமாகும். இதனையே Smart Power என அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்தோ - பசிபிக் மூலோபாயங்களாக,
1) இராணுவ மற்றும் பாதுகாப்பு.
2)QUAD குவாட் எனப்படும் பாதுகாப்புக் கூட்டணி(அமெரிக்கா–இந்தியா–ஜப்பான்–ஆஸ்திரேலியா).
3)AUKUS எனப்படும் கூட்டணி(அமெரிக்கா–இங்கிலாந்து–ஆஸ்திரேலியா).
4)கடற்படை பயிற்சிகள், தள அணுகல் ஒப்பந்தங்கள் (Access Agreements).
போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் எழுந்து வரும் சீனாவின் இந்து சமுத்திர வலிமையை சமப்படுத்தி, அதன் செல்வாக்கை கட்டுப்படுத்தி, சமன் செய்வதற்காக(Balance of Power), யதார்த்தவாதி(Realist) அணுகுமுறையை இப்போது பின்பற்ற தொடங்கி இருக்கிறது.

இந்தப் போக்கில் தான் இப்போது இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் அதன் மற்றும் தொழில்நுட்ப செல்வாக்கு, விநியோகச் சங்கிலி (Supply Chains) மறுசீரமைப்பு, டிஜிட்டல் கட்டமைப்பு, AI, Cyber Security (AI, சைபர் செக்யூரிட்டி) மற்றும் சீனாவின் Belt and Road Initiative-க்கு மாற்றான பொருளாதார விளம்பர பிரச்சார உத்திகளை கையாள்கிறது.
இத்தகைய, புதிய தாராளமய நிறுவனவாதம்(Neo-liberal Institutionalism) வழியாக அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் தமது முலோபாய செல்வாக்கை (Strategic Influence) நிலை நாட்ட முனைகிறது.
புதிய உடன்படிக்கை
தற்போது 14 நவம்பர் 2025 அன்று புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை (MOU) ஒன்றை மாநில கூட்டாண்மை திட்டத்தின்கீழ்(Status Partnership Program) கையெழுத்தானது.
இது இலங்கைக்கும், அமெரிக்காவின் Montana National Guard, மற்றும் அமெரிக்க கடலோர காவல் படை பிராந்திய நிர்வாகப் பிரிவு-13(US Coast Guard District-13) ஆகியோருக்கு இடையே இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.
இதில், அமெரிக்கத் தூதர் ஜூலி சங் (Julie Chung), அமெரிக்க மொன்டானா தேசிய பாதுகாப்புப் படையின் துணைத் தலைமைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ட்ரென்டன் கிப்சன்(Montana National Guard- Adjutant General Brig. Gen. Trenton Gibson) மற்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர், ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயக்கொந்தா ( Air Vice Marshal Sampath Thuyacontha (Retd) ஆகியோர் இந்த MOU-வில் கையெழுத்திட்டனர்.
இந்த MOU பின்வரும் துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாடு குறித்த அடிப்படை கட்டமைப்பை நிறுவுகிறது.
(1) பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு. இரு நாடுகளின் ராணுவ மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கிடையில் தொடர்பு மற்றும் கலந்தாய்வு மேம்பாடு.
(2) கூட்டுப் பயிற்சிகள் மற்றும் பரிமாற்றங்கள். கூட்டு ராணுவ மற்றும் தொழிற்பயிற்சி, பணியாளர் பரிமாற்றம் மற்றும் அனுபவ பகிர்வு.
(3) கடல்சார் பாதுகாப்பு (Maritime Security) கடல் வழித்தட பாதுகாப்பு, கடல்சார் செயல்பாட்டின் கண்காணிப்பு போக்குவரத்து பாதுகாப்பு கூட்டு நடவடிக்கைகள்.
(4) நிவர்த்தி மற்றும் பேரிடர் உதவி. பேரிடர் பதிலடி (Disaster Response) மேம்பாடு மனித நீர், மருத்துவ மற்றும் சமூக விடுதலை உதவி திட்டங்கள்.
(5) தொழிநுட்ப மற்றும் குற்ற எதிர்ப்பு.
சைபர் பாதுகாப்பு(Cyber defence), போதைப்பொருள் தடுப்பு மற்றும் இயற்கையழிவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள்.
State Partnership Program (SPP) என்பது அமெரிக்க National Guard Bureau உருவாக்கிய ஒரு பன்னாட்டு பாதுகாப்பு கூட்டமைப்பு.
இது அமெரிக்க மாநில ராணுவ அணிகளையும் பிற நாடுகளின் ராணுவத்தையும் இணைத்து திறன் மேம்பாடு மற்றும் பயிற்சியை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
இந்த உடன்படிக்கையால் இலங்கை 115-க்கும் மேற்பட்ட நாடுகளின் SPP பங்காளர்களில் ஒன்றாக இணைத்துள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கை தீவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது பலாலி விமானப்படைத் தளத்தில் அமெரிக்க இராணுவம் தரையிறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த மனிதாபிமான பணியை நிவாரணமா? மூலோபாயமா? என்ற கேள்வி கேட்கப்பட்டால் அதற்கு இந்தோ–பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் Strategic Influence என்பது வலுக்கட்டாய இராணுவ மேலாதிக்கம் மட்டுமல்ல, அது Soft Power, Humanitarian Diplomacy, கருத்தியல் விளம்பரங்களும் பரப்புரைகளும், நிறுவன ஒத்துழைப்பு ஆகிய அனைத்தையும் இணைத்த ஒரு நுண்ணிய மதிநுட்ப வலு மூலோபாய செல்வாக்கு(Smart Power strategic influence) மூலோபாயம் என்றுதான் சொல்ல சொல்ல வேண்டும்.

இத்தகைய மதிநுட்ப வலு மூலோபாய ராஜதந்திர செயலாற்றுகை பற்றி 1990-களில் சீன இனத்தவரான அமெரிக்க அரசியல் மற்றும் சர்வதேச உறவியல் கோட்பாட்டாளரான அறிஞரான Joseph S. Nye Jr.(ஜோசப் நை)
மேற்படி, அமெரிக்காவின் முழுபாய செல்வாக்கு முறைமை பற்றி அவர் எழுதிய “Bound to Lead“ (1990) (முன்னணிக்கு கட்டுப்படு), Soft Power: The Means to Success in World Politics (2004) (மென் சக்தி: உலக அரசியலில் வெற்றிக்கான வழிமுறைகள்), The Future of Power (2011) (அதிகாரத்தின் எதிர்காலம்) ஆகிய நூல்களில் விளக்கியுள்ளார்.
அவர் "ஒரு நாடு படை அல்லது பொருளாதார அழுத்தம் (Hard Power) இன்றி தன் கலாசாரம், அரசியல் மதிப்பீடுகள், வெளிநாட்டு கொள்கையின் நம்பகத்தன்மை ஆகியவற்றின் மூலம் பிற நாடுகளை ஈர்த்து தாக்கம் செலுத்துவதே Soft Power" என விளக்கியார்.
அதாவது படை பலம், (Military force) பொருளாதார அழுத்தம் (Economic sanctions) இவையின்றி, மனப்பூர்வ ஒப்புதல் மற்றும் ஈர்ப்பு மூலம் தாக்கம் செலுத்துவது Soft Power ஆகும்.
Joseph S. Nye முன்வைத்த Soft Power கருத்து “அதிகாரம் என்பது வலிமையில் மட்டுமல்ல ஈர்ப்பிலும் உள்ளது” என்பதை உலகிற்கு உணர்த்தியது.
இன்றைய சர்வதேச அரசியல், தூதரகம் மற்றும் கலாசார உறவுகளில் Soft Power ஒரு முக்கிய சக்தியாக விளங்குகிறது. இந்த அடிப்படையில் தான் அமெரிக்கா தனது இந்தோ- பசிபிக் பிராந்தியத்தின் மூலோபாயத்தை வகுத்திருக்கிறது.
ஆயினும், இந்தியா இந்த பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சக்தி என்ற அடிப்படையில், அமெரிக்க முன்னே, இந்தியா பின்னே என்ற தோரணையில் இந்தியாவையும் இணைத்து இந்த பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதற்கான செயல்படுவமாக இலங்கை தீவில் பலாலி விமான நிலையத்தில் நிவாரண பணிக்காக தனது விமானப்படையை இறக்கி இலங்கை தீவுக்குள் காலூன்றி முதலாவது நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறது.
இது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் வேறுபட்ட செய்திகளை சொல்லி இருக்கிறது. இந்தியாவுக்கு இந்து சமுத்திரத்தில் தனக்குறிய வகிபாகத்தை இந்தியா வகிக்கவில்லை என்பதை அது சுட்டிக்காட்டி இருக்கிறது.
அதே சமயம், சீனாவுக்கு இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவை மீறி யாரும் செயல்பட முடியாது என்ற செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 29 December, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.