தோல்விகளை கண்டு துவண்டுவிடவேண்டாம்: ஜீவன் தொண்டமான் (video)
தோல்வியே சிறந்த ஆசான், அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, முன்னேறுவதற்கான வழிகளை நாம் அடையாளம் காண வேண்டும் எனவே, தோல்விகளை கண்டு துவண்டுவிடவேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பரிசளிப்பு நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
''எம்மில் சிலர் தோல்வியைக் கண்டு அஞ்சுகின்றனர். துவண்டுபோய் விடுகின்றனர். தோல்வியைக்கூட எமக்கு சாதகமான விடயமாக மாற்றிக்கொள்ள வேண்டும். எமது பலம் எது, பலவீனம் எது என்பதை அதன் ஊடாக அறியலாம்.
வெற்றி தோல்விகள்
எங்கு தவறு இடம்பெற்றுள்ளது என்பதையும் உணரலாம். தோல்வி என்பது சிறந்த ஆசான். பல பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்.
தோற்றுவிட்டால், எம்மை ஒதுக்கி, கண்டு கொள்ளாத இதே சமூகம்தான், தோல்வியில் இருந்து மீண்டுவிட்டால் வாழ்த்தி வரவேற்கும்.
மாலைபோட்டு மரியாதை செலுத்தும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவேதான் தோல்வியைக் கண்டு அஞ்ச வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். நாம் அடிமட்டத்தில் இருக்கின்றோம்.
போதைப்பொருள் பாவனை
இனியும் பின்நோக்கி செல்ல இடமில்லை. எனவே, நாம் முன்வேறவேண்டும். அதற்காக மட்டுமே முயற்சிக்க வேண்டும்.
போதைப்பொருள் பாவனையால் தூக்கம் வராது, நன்றாக படிக்கலாம் என ஏமாற்றி மாணவர்களை, சிலர் போதைக்கு அடிமையாக்குகின்றனர்.
போதை என்பது ஆபத்தானது. உயிரை பறிக்ககூடியது. எனவே, எவரும் அந்த அபாயத்துக்குள் விழுந்துவிடக்கூடாது.
பிரஜா உரிமை
30 வருடங்கள் எமக்கு பிரஜா உரிமை இருக்கவில்லை. பின்நிலைப்படுத்தப்பட்டுள்ளோம். இந்நிலையில் போதைப்பொறிக்குள்ளும் நாம் சிக்கிவிடக்கூடாது.
இந்நிலையில் பெற்றோர் விழிப்பாக இருக்க வேண்டும். இதற்கு மேலும் அடிபணிந்தோ, அடிவாங்கியோ வாழ முடியாது. முன்னேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.



