டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை : மக்கள் விசனம்
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவிகள் தமக்கு உரிய முறையில் கிடைக்கவில்லை என மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தம்பனைக்குளம் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நேற்று (21.04.2026) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த கிராமத்திற்கு விஜயம் செய்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகளை அவரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த கிராமத்தில் தற்போது சுமார் நூறு குடும்பங்கள் வரை வசித்து வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள்
இந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டது போல் தம்பனைக்குளம் கிராம மக்களும் பாதிக்கப்பட்டதுடன் உடமைகளும் சேதமாக்கப்பட்டன.
ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளும் முற்றாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டதோடு, விவசாய செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தினால் 25 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை வீடு துப்பரவு செய்தல் உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்காக மாத்திரம் கொடுப்பணவுகள் வழங்கப்பட்டன.

எனினும் கால்நடை இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வரை மன்னார் மாவட்டத்தின் ஏனைய கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு விவசாய பாதிப்புகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த கிராம மக்களுக்கு குறித்த இழப்பீடுகளுக்கான எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை .மேலும் இந்த கிராம மக்களின் விவசாய செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பலரது கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளதுடன் தமது கால்நடைகள் அழிவு குறித்து தாங்கள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் உரிய ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தை கூறி எமக்கான கால்நடை அழிவுக்கான கொடுப்பனவை பெற்றுத் தர மறுத்து விட்டனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதேசச் செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் குறித்த விடையங்களில் தலையிட்டால் தமக்கு குறித்த இழப்பீடுகளை பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படும் தமக்கான இழப்பீடுகளை பெற்றுத்தர துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
