மோசடியை மறைக்கிறதா மாவட்ட திட்டமிடல் பிரிவு!மூன்று மாதங்கள் கடந்தும் பதில் இல்லை
மண்டைதீவு சுற்றுலா மையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் யாழ். மாவட்ட செயலக திட்டமிடல் கிளைக்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் கோரிக்கைக்கு 3 மாதங்கள் கடந்தும் பதில் வழங்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் அமைச்சு ஒன்றில் சுமார் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ். மாவட்ட செயலகத்தால் மண்டைதீவு சுற்றுலா மையத்தின் வேலை திட்டத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டது.
அபிவிருத்தி பணிகள்
குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வேலனை பிரதேச செயலகம், மற்றும் வேலனை பிரதேச சபை இணைந்து மண்டைதீவு சுற்றுலா மையத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்த நிலையில் குறித்த திட்டம் இதுவரை மக்களுக்கு பயன் அளிக்கவில்லை.
திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட கடல் பிரதேசம் ஆழம் குறைந்த கடற்பகுதியாக காணப்படும் நிலையில் படகு சவாரிகளை மேற்கொள்ள அதிகாரிகள் குறித்த கடல் பிரதேசத்தை எவ்வாறு தெரிவு செய்தார்கள்?
சாட்டி மற்றும் காரைநகர் கடற்கரைகள், சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து
செல்லும் பகுதியாக காணப்படும் நிலையில் ஏன் குறித்த திட்டத்தை மண்டைதீவில்
செயற்படுத்தினார்கள்?
மக்களின் வரிப்பணத்தில் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் மண்டைதீவு சுற்றுலா மையத்தில் தற்போது ஒளிராத மின்குமிழ்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
தகவல் அறியும் சட்டமூலம்
இவ்வாறு பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் மண்டைதீவு சுற்றுலா மையத்திற்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அறிய வரும் நிலையில் யாழ். மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவுக்கு கடந்த 6ஆம் மாதம் தகவல் அறியும் சட்டமூலத்தில் சுற்றுலா மையம் தொடர்பான தகவல்கள் கோரப்பட்டன.
இவ்வாறான நிலையில் மூன்று மாதங்கள் கடந்தும் யாழ். மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவால் குறித்த திட்டம் தொடர்பாக கோரிக்கையாளருக்கு இதுவரை பதில் வழங்கப்படவில்லை” என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்திற்கான நிதி விடுவிப்பை யாழ். மாவட்ட செயலக திட்டமிடல்
பிரிவே மேற்கொண்ட நிலையில் குறித்த திட்ட முறைகேடுகளுடன் அதிகாரிகள்
தொடர்புபட்டுள்ளார்களா என்ற சந்தேகம் தோன்றுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.