வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு:துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை-மைத்திரி
வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க நேரிடும் என அந்த கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு எதிரான செயல்
வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்தது. அதற்கு அமையவே வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தோம். மத்திய செயற்குழுக்கூட்டத்தில் துமிந்த திஸாநாயக்கவும் கலந்துக்கொண்டார் என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
எவ்வித அச்சமும் இல்லை
முன்னளா் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கைப்பற்றுவாரா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன, அது பற்றிய எவ்வித அச்சமும் இல்லை. எவரும் கட்சிக்கு வரலாம் என தெரிவித்துள்ளார்.