வடிவேல் சுரேஷிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்காக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பிரேரணை நிறைவேற்றம்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை நேற்றைய தினம் (24.05.2023) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஆதரவாக 123 வாக்குகளைப் பெற்று 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
குறித்த பிரேணை மீதான வாக்கெடுப்பின்போது, அதற்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி ஏகமானதாகத் தீர்மானித்திருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்
கட்சியின் குறித்த தீர்மானத்துக்கு முரணாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் கலந்தாலோசித்து தீர்மானம் அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியவுடன் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |