முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு 16 இலட்சம் ரூபா பெறுமதியான குருதி சுத்திகரிப்பு இயந்திரமொன்று கடந்த 11ஆம் திகதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் 306B 1, முகத்துவாரம் - மட்டக்குளிய லயன்ஸ் கழகத்தினரின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
மோதர- மட்டக்குளிய லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர் லயன் ரெங்கநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கனடாவில் வசிக்கும் மருத்துவர் ஒருவரின் நிதிப்பங்களிப்பில் இந்த குருதி சுத்திகரிப்பு இயந்திரம் மாவட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதில் 306B 1 இன் மாவட்ட ஆளுனர் லயன் R. L ராஜ்குமார் அவரது துணைவியார் லயன் மேரியன், மாவட்ட இரண்டாம் பிரதி ஆளுனர் லயன் ப்ளஸிடஸ் பீட்டர், துணைவியார் லயன் சாவித்ரி, மாவட்ட பிரதி குழு கணக்காளர் லயன் சந்திரசேகர், மாவட்ட பிரதி பொதுசெயலாளர் மயூரதன் மற்றும் மட்டக்குளிய லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள், மாவட்ட வைத்தியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் மருத்துவ உதவிகளை செய்துவரும் 306B 1 இன் மாவட்ட ஆளுனர் லயன் R. L ராஜ்குமார் அவர்களுக்கும், மோதர- மட்டக்குளிய லயன்ஸ் கழக நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும், வைத்தியர்கள் பாராட்டு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.