இலங்கை முழுவதும் 72 டெங்கு மரணங்கள் பதிவு - பல பகுதிகள் அதி அபாய வலயங்களாக அடையாளம்
இலங்கை முழுவதும் 72 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 95,493ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 72 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அதன் இறப்பு வீதம் 0.076% ஆகப் பதிவாகியுள்ளது.
டெங்கு நோயாளர்கள் பதிவு
இந்த ஆண்டில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 29,964 ஆகும். இதற்கு மேலதிகமாக, ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஆகஸ்ட் மாதத்தில் 10,157 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் 50,506 பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.

அத்துடன் தெற்கு மாகாணத்தில் இருந்து 13,886 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் இருந்து 8,710 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் அதிகளவு நோயாளர்கள்
மாவட்ட மட்டத்தில் கருதும் போது, அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அது மொத்த நோயாளர்களில் 21.31% ஆகும்.
கொழும்பு மாவட்டத்தில் 18,914 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,977 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். அத்துடன் நாடு முழுவதும் உள்ள 50 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் மேலும் அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15