இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து..! அபாய மண்டலங்களின் பட்டியல் வெளியீடு
புதிய இணைப்பு
இலங்கையின் 14 மாவட்டங்களில் உள்ள 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை டெங்கு உயர் அபாய மண்டலங்களாக அறிவித்து அரசாங்க தகவல் திணைக்களம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, மேற்கு மாகாணம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர் அபாய மண்டலங்கள் அடையாளம்
கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு மாநகர சபை பகுதியில் உள்ள மகரகம, பிலியந்தல, ஹோமாகம, கடுவலை, பொரலஸ்கமுவ, தெஹிவளை போன்ற பல பிரிவுகள் உயர் அபாய மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, சீதுவ, களனி, ராகமை, மினுவாங்கொட, நீர்கொழும்பு, பியகம, வத்தளை, கந்தானை மற்றும் மஹர ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளும் இந்த அதிக ஆபத்துள்ள பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம, ஹொரண, இங்கிரிய, மத்துகம, பாணந்துறை, வாதுவ, களுத்துறை மற்றும் பயாகல ஆகிய பிரதேசங்கள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம், பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள கிராம பிரிவுகளும் இந்த அதிக ஆபத்துள்ள பட்டியலில் உள்ளடங்குவதாக கூறுகின்றது.
முதலாம் இணைப்பு
நாட்டில் டெங்கு படிப்படியாக ஒரு பெரும் பெருந்தொற்றாக தீவிரமடைந்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு மாகாணம் உட்பட டெங்கு பரவலாக உள்ள ஐந்து மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டாம்
மேலும், கொழும்பு தேசிய வைத்தியசாலை, அங்கொட தேசிய தொற்றா நோய்கள் நிறுவனம் (IDH), நீர்கொழும்பு, ஹோமகம, ராகம, களுபோவில மற்றும் பானதுறை வைத்தியசாலை ஆகியன அவற்றின் கொள்ளளவை தாண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிகிச்சை பெற வரும் டெங்கு நோயாளிகள் வைத்திய ஆலோசனையின் பேரில் வீட்டிலேயே வைத்து தேவையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வைத்தியசாலைக்கு வரும் அனைவருக்கும் தகுதிவாய்ந்த வைத்தியரிடம் பரிந்துரைக்கப்பட்டு, தேவையான வைத்திய பரிந்துரைகள் வழங்கப்படும் என்பதால், பொதுமக்கள் வைத்தியசாலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று (22) காலை நிலவரப்படி, கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒரே நாளில் பதிவான நோயாளிகளின் அதிகபட்ச எண்ணிக்கையான 1069 பேர் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளனர்.
தற்போது பரவிவரும் டெங்கு வைரஸ்
நாட்டில் தற்போது பரவி வரும் டெங்கு வைரஸ் வகைகள் DEN V 2 மற்றும் DEN V- 3 ஆகும் என்றும், 2017-ஆம் ஆண்டில் 440 உயிர்களைப் பறித்த DEN V- 2 வைரஸ் பரவலால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்ததன் காரணமாக இந்த ஆண்டு நிலைமை மோசமடைந்துள்ளது என்றும் வைத்தியர் கபில கண்ணங்கரா தெரிவித்துள்ளார்.
இதுவரை வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, நாட்டில் டெங்கு பரவலில் 75 சதவீதம் DEN V - 2 வைரஸ் வகையாலும், மீதமுள்ள 25 சதவீதம் DEN - 3 வைரஸ் வகையாலும் ஏற்படுகிறது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
டெங்கு வைரஸை முற்றிலுமாக ஒழிக்க முடியாது என்றும், டெங்கு வைரஸைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களை அழிப்பதே செய்யப்பட வேண்டியது என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களால் மட்டும் செய்ய முடியாது என்றும், நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து தாங்கள் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இடங்களைச் சுத்தம் செய்து, கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகளைக் காண்பது ஒரு தீவிரமான நிலை என்றும், இவ்வாறு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், வைத்தியசாலை அமைப்பு சரிந்துவிடும் என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.