நாட்டில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்கள் : இருவர் பலி- ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
நாட்டில் நேற்று இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச் சம்பவங்கள் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மிதிகம
மிதிகம பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துர்கி கிராமத்தில் நேற்று (21) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
படுகாயமடைந்த 46 வயதுடைய குடும்பஸ்தர் வலான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும், அவரைக் கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை
இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பதுளை எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுக்கொடை தோட்டத்தில் நேற்று (20) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இருக்கொட தோட்டம், உடு கும்பல்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது குடும்பஸ்தரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரும் தாக்குதலில் காயமடைந்துள்ள நிலையில் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



