வெளிநாடு சென்ற மற்றுமொரு வீட்டுப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கதி
மலேசியாவில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குருநாகல் - கொபேகனே, அரலுகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி, மாலபேயில் வசிக்கும் தனது நண்பர் ஒருவரின் ஊடாக சுற்றுலா விசாவில் இப்பெண் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் வேலை செய்ய முடியாத நிலை
இந்தநிலையில், கடந்த 23ஆம் திகதி, வீட்டில் வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார் எனவும், வேறு இடத்தில் தற்போது பணியில் இணைந்துள்ளார் எனவும் கணவரிடம் அப்பெண் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் அவர் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் இரண்டாவது மாடியின் ஜன்னலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று நேற்றிரவு வீட்டாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் வீட்டுப்பணிப்பெண்
அண்மையில் சிங்கப்பூரில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கை பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
புத்தளம் - தங்கொடுவ - மொட்டேமுல்ல பகுதியைச் சேர்ந்த 41 வயதான நதிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற திருமணமான பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
குறித்த பெண், தான் வேலை செய்த வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக அவரது வீட்டாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |