சிறுமியை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முல்லைத்தீவு- நாயாறு பகுதியில் சிறுமியொருவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி பன்னிரெண்டு வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய குற்றச் சாட்டுத் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருட்கள் என்பவற்றையும் முலலைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
கடூழிய சிறை
தொடர்ந்து குறித்த வழக்கானது ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த வழக்கின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் (09-03-2026)குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதிA.G அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த குற்றவாளிக்கு பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பத்து இலட்சம் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் இரண்டு வருட சாதாரண சிறைத்தண்டனையும் அத்துடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் மூன்று மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.