திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 5 பேர் உயிரிழப்பு
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் ஐந்து பேர் மரணித்துள்ளதாகவும், 55 பேர் கோவிட் தொற்றாளர்களாக இணங்காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை கிடைக்கப் பெற்ற தரவுகளின் அடிப்படையில் மாவட்டத்தில் 5 பேர் மரணித்துள்ளதாகவும், 55 பேர் கோவிட் 19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 57 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 206 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேரும், திருகோணமலை பிராந்தியத்தில் 11 பேரும், கிண்ணியாவில் 6 பேரும், குறிஞ்சாங் கேணியில் 6 பேரும், குச்சவெளியில் நான்கு பேரும், தம்பலகாமம், உப்புவெளி மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் தலா இருவர் வீதம் இனங் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் 2150 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று 16ஆம் திகதி வரை 709 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்றாவது
அலையில் 2538 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண
சுகாதார சேவைகள் பணியக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.