யாழில் ஆலய வாசலில் திடீரென மயங்கி விழுந்த பெண் - பரிசோதனை அறிக்கையில் தெரியவந்த விடயம்
யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் ஆலய வாசலில் மயங்கி விழுந்து உயிரிழந்த வல்வெட்டித்துறையை சேர்ந்த பெண்ணுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ஸ்ரீ ராஜேந்திரா சந்திரவதனா (வயது 68) என்பவர் நேற்று முன் தினம் யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையிலிருந்து யாழ்., கொட்டடி பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஆலய வாசலில் நின்றிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவருடைய மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
அதன் தொடராக நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.