சுகாதார பணியாளர்கள் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு
சுகாதாரப் பணியாளர்கள் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அதிகாரிகள் தமக்கு அநீதி இழைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தி சுகாதாரப் பணியாளர்கள் இவ்வாறு அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கோவிட் - 19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட தமக்கு கிடைக்கப் பெறவில்லை என சுகாதாரப் பணியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் எவ்வாறு பணிகளை முனனெடுப்பது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
எவ்வாறெனினும் கோவிட்- 19 நோய்த் தொற்றாளிகளுக்கு சிகிச்சை அளிக்கு நடவடிக்கைகள் தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இன்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பதமடைந்தன.
கோவிட் காலத்தில் அர்ப்பணிப்பு மிக்க சேவையினை தாதியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் முன்னெடுத்துவரும் நிலையில் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள ஓரு துறைக்கு மட்டுமே அனைத்து வரப்பிரசாதங்களும் வழங்கப்படுவதாகவும் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரச தாதியர் சங்கம், அரச சுகாதார ஊழியர்கள் சங்கம் உட்படப் பல சங்கங்கள் இன்றைய
போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு செய்தி - குமார், நடேசன், ரூசாத்
கிளிநொச்சி
கிளிநொச்சியிலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது தமக்குக் கிடைக்கவேண்டிய மேலதிக நேரத்திற்கான கொடுப்பனவு, சுகாதார பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்க வேண்டும் போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி செய்தி - யது
மன்னார்
மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் முருங்கன் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தங்களுடைய கோரிக்கைகளை உதாசீனம் செய்யாமல் தங்களுடைய கோரிக்கைகள் நியாயமானது என்பதை நினைத்து கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார்கள் என நம்புகின்றோம் எனவும் அவ்வாறு நிறைவேற்றித் தராத பட்சத்தில் எதிர் வரும் சில தினங்களில் ஐந்து தொழிற்சங்கங்களும் இணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் சுகாதார உத்தியோகஸ்தர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
மன்னார் செய்தி - ஆசிக்
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் சுகாதார சிற்றூழியர்கள் வைத்தியசாலைகளுக்கு முன்னால் எதிர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
15 கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னால் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை செய்தி - யாசீம்
வவுனியா
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளரின் நன்மை கருதி சுகாதார ஊழியர்கள் சேவை வழங்கிய போதும், ஏனைய நோயாளர் விடுதிகளில் வைத்தியர்களே முழுமையான சேவைகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா செய்தி - திலீபன்