மரபணுவில் சிக்கப் போகும் பௌத்த துறவியின் மோசமான லீலைகள்
அநுராதபுரத்தில் சிறுமியை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய பிக்குவின் மரபணுவை பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய தினம் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குச் சென்று, அரச பகுப்பாய்வாளரிடம் தனது இரத்த மாதிரியை வழங்குமாறு பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு அனுராதபுரம் பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
மரபணு பரிசோதனைக்காக இதனை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இரத்த மாதிரியை வழங்கிய பின்னர் மேற்கொள்ளப்படும் மரபணு பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரச பகுப்பாய்வாளருக்கு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.
மரபணு பரிசோதனை
நிட்டம்புவ பொலிஸார் மேலதிக அறிக்கை ஒன்றின் மூலம் நீதிமன்றத்திற்கு முன்வைத்த தகவல்களை கருத்திற்கொண்டு அனுராதபுரம் பிரதம நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், மரபணு பரிசோதனைக்காக அரச பகுப்பாய்வாளரிடம் முன்னதாக அனுப்பப்பட்டிருந்த, சிறுமியால் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக, நிட்டம்புவ பொலிஸார் மேலதிக அறிக்கையைச் சமர்ப்பித்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, வழக்கு பொருட்களாகப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஆடைகள் தொடர்பாக அரச பகுப்பாய்வாளர் மரபணு பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்.
கடுமையான நிபந்தனை
சிறுமியின் ஆடைகளில் மரபணு காணப்படுவது அந்தப் பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சிறுமி ஒருவரைத் கொடூரமான முறையில் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபரான பிக்கு, கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அட்டமஸ்தானங்களின் விகாராதிபதியாக கடமையாற்றி வந்த நிலையில், கடந்த வெசாக்நோன்மதி தினத்தன்று அந்தப் பதவி இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.