சமஷ்டி என்ற விளம்பரப் பலகையை விட அதன் உள்ளடக்கமே தேவை: சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து!
சமஷ்டி என்ற விளம்பரப் பலகையை விட அதன் உள்ளடக்கமே தேவைப்பாடாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று (11.01.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சமஷ்டி ஆட்சி
நாடாளுமன்றில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சமஷ்டியே நாட்டை காப்பாற்றக் கூடியது என கருத்தொன்றை முன்வைத்துள்ளார். ஆனால் சமஷ்டி என்றால் என்ன? அதன் உள்ளடக்கம் என்ன? என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.
இதேவேளை ஒற்றை ஆட்சி முறைமை தமிழ் மக்கள் தம்மை அடக்கி ஆளும் என்ற ஒரு எண்ணப்பாட்டிலும், சமஷ்டி ஆட்சி முறைமை தமது இறைமையை இழப்பது போன்றும் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் ஓர் அறியாமை நிலவி வருகின்றது.
ஆனாலும் ஒற்றை ஆட்சியை பொறுத்தவரை அது ஒன்றிணைந்திருந்த ஐக்கிய இராட்சியத்தின் பிரித்தானியா, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, ஐரிஸ் பிரச்சினைகளை தீர்க்க வழிவகுத்துள்ளது.
பிரித்தானியாவில் மன்னராட்சி முறைமை இருந்தபோதிலும் அங்கு ஜனநாயக வழிமுறையில் ஒற்றை ஆட்சியூடான நடைமுறையே உள்ளது. ஆகவே இங்கு சொல்லாடல் பிரச்சினையே தடையாக உள்ளது.
13 ஆவது திருத்தம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற அரசியல் இலக்குடன் செயற்பட்டு வருகின்றது.
அதேவேளை இரு தேசம் ஒரு நாடு என்ற கருத்தை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூறி வருகின்றது. அவர்கள் அவ்வாறு கூறுவதற்கு தேர்தல் அரசியலே காரணம்.சமஷ்டி என்பது தேர்தல் கோசம். 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதில் தடை இருக்காது என ஜனாதிபதி கூறியுள்ளார். ஐ.நா சபையின் மனித உரிமை பேரவை இதைத்தான் வலியுறுத்துகின்றது.
எமது மக்களுடைய அரசியலுரிமைக்கான வழிமுறை என்பது 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதும் பொறிமுறை என்பது தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுமே எமது கட்சியின் நிலைப்பாடு.
ஆயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது வழிமுறைக்கு வருகின்ற போதும் பொறிமுறைக்கு வரவில்லை. அவர்கள் கூறுவது ஐ.நா.வில் முறையிடுவோம் சர்வதேசத்துக்கு கூறுவோம் என்று ஏமாற்று அரசியலையே செய்ய முனைகின்றனர்.
ஆகவே அனைவரும் சொல்லாடல்களை கைவிட்டு எமது அரசியல் உரிமைக்கான தீர்வை நோக்கி நகர, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் கூயாட்சி என்ற இலக்குடன் பயணிக்க வேண்டும் எனவும் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
