முல்லைத்தீவு பகுதியில் விமானத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு (Video)
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் விமானப்படையிரினரின் தாக்குதலில் உயிரிழந்த 12 அப்பாவி பொதுமக்களின் 33ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (27.11.2023) காலை 10.30 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில், 1990 ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியில் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடாகி கொண்டிருந்த வேளை, இலங்கை விமானப்படையினரின் தாக்குதலினால் 12 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
நினைவு நிகழ்வு
இந்த மக்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தாய்த்தமிழ் உறவுகள் நினைவேந்தல் அமைப்பு மற்றும் தாய் தமிழ் பேரவையின் ஒழுங்கமைப்பில் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
நிகழ்வில் உயிரிழந்தவர்களின் திருவுருவப்படங்கள் ஒட்டிசுட்டான் சிவன் ஆலயம் முன்பாக வைக்கப்பட்டதுடன், பொதுச்சுடரினை முதலில் உயிரிழந்தவரில் ஒருவரின் உறவினர் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் உறவினர்களால் சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு, வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுரைகள் இடம்பெற்றிருந்ததோடு நிகழ்வின் இறுதியில் உறவுகளுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தாய்த்தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.சத்தியரூபன், பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













