கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து திட்டம் தொடர்பாக அரசாங்கத்தின் புதிய நிலைப்பாடு
ஜப்பானின் ஆதரவுடனான, கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து (LRT) திட்டம் தொடர்பாக அரசாங்கம் இன்னும் கொள்கை முடிவு எடுக்கவில்லை என்று நிதியமைச்சின் வெளிவிவகாரத் துறையின் இயக்குநர் ஆர்.எம்.எஸ்.பி.எஸ். பண்டாரா தெரிவித்துள்ளார்.
ஜப்பானுடனான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து நிதியமைச்சகத்தில் இன்று (7) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலகு தொடருந்து போக்குவரத்து திட்டம் குறித்து ஜப்பான் அரசாங்கத்துடன் புதிய விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆர்.எம்.எஸ்.பி.எஸ். பண்டாரா கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் திட்டமிடப்பட்டிருந்த இந்தத் திட்டம், பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவால், ஜப்பான் அல்லது அதன் முக்கிய நிதி நிறுவனமான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஆகியவற்றுடன், எந்த ஒரு விவாதமும் இல்லாமல் 2021 இல் இரத்து செய்யப்பட்டது.
எனினும், அதிகாரத்திற்கு வந்தவுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 இல் டோக்கியோவுக்கான தனது அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, திட்டத்தை இரத்து செய்ததற்காக ஜப்பான் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டார்.
இந்தநிலையில், 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 11 திட்டங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்த ஜப்பானிய அதிகாரிகள், 1.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள இந்த எல்.ஆர்.டி திட்டத்தை ஒரு புதிய எதிர்கால திட்டமாகவே கருதலாம் என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |