புதிய பெயருடன் சர்ச்சைக்குரிய "நரக நெருப்பு" இசை நிகழ்ச்சியை நடத்த வழங்கப்பட்ட அனுமதி
தமது நிகழ்ச்சியை நடத்துவதற்காக கொழும்பில் உள்ள உயர் அதிகாரி ஒருவரை சந்திக்க வேண்டிய நேரத்தில் தமக்கு உதவியதாகக் கூறி இராஜாங்க அமைச்சர் டயானா கமகேக்கு 'ஹெல்ஃபயர்' இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
நிகழ்வின் சார்பில் 'ஹெல்ஃபயர்' இசை நிகழ்ச்சியின் முக்கிய அமைப்பாளர் தோர்ஸ், டயானா கமகேக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது உரையாற்றிய தோர்ஸ், இந்த நிகழ்வுக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தின் ஆதரவும் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
தாமரை கோபுரத்திற்கு அருகில் நேற்று நடைபெற்ற இசை விழாவிற்கு நரக நெருப்பு ('ஹெல்ஃபயர்') என்ற பெயர் பயன்படுத்தப்படுவதற்கு முன்னதாக கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
எனது நகரத்தில் 'நகர நெருப்பு' பெயர் கொண்ட இசை நிகழ்ச்சியை பார்க்க விரும்பவில்லை என்றும், அதற்கு அனுமதி வழங்க தாம் தயாராக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து குறித்த நிகழ்வுக்கு 'பயர்' என்ற பெயரை பயன்படுத்த ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்த நிலையிலேயே, மாநகர சபையின் ஆணையாளர், அதற்கான அனுமதியை வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதலாம் இணைப்பு
சர்ச்சைக்குரிய "நரக நெருப்பு" (Hellfire) இசை நிகழ்ச்சியை புதிய பெயரான ஃபயர் (Fire) என்ற பெயருடன் தாமரை கோபுரத்தில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தனவின் நிபந்தனை அனுமதியின் பேரில் இந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அமைப்பாளர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
"ஹெல்ஃபயர்" என்ற பெயரை சாத்தானிய வழிபாட்டு முறையின் பெயராகக் கூறுவதால், அதை நிறுத்தி வைக்குமாறு அமைப்பாளர்கள் ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்கவின் ஆலோசனையின் பேரில், மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், நிகழ்ச்சியின் பெயரை மாற்றி, எந்த மதத்தையோ அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிபாட்டு முறைகளையோ அவமதிக்காமல் நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனை
இலங்கை சமூகத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய எதனையும் செய்ய முடியாத நிலையில், நிகழ்வின் போது மதுபானங்களை விற்பனை செய்வதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு ஆணையாளர் ஏற்பாட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த இசை நிகழ்ச்சியின் நோக்கம் சாத்தானிய வழிபாட்டு முறையை ஊக்குவிப்பதாகவும், இலங்கையில் இதுபோன்ற நடைமுறைகளை தடை செய்ய வேண்டும் என்றும் கிறிஸ்தவ இளைஞர் சங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.